வியாழன், 22 செப்டம்பர், 2016

பித்ருமகாளய பட்சமும் தானங்களும்

எனது அருமை வாசகர்களே.., 
தமிழிற்கு வரும் புரட்டாசி 14 அன்று அமாவாசை மஹாளய அமாவாசையாகும். (ஆங்கிலத்திகதி 30-09-2016)
இக்காலத்தில் எமது முன்னோர்கள் பூலோகம் வந்து எம்மை பார்த்து வாழ்த்திவிட்டு செல்லும் காலமாகும். முன்னோர்கள் மட்டுமில்லை எம்முடன் பழகியவர்கள், நாம் அன்பாக பேணி வளர்த்த பிராணிகள் என எம்மில் அன்புகொண்ட ஆத்மாக்கள் யாவும் எம்மை பார்க்க வரும். இந்த தட்சிணாய புண்ணிய காலத்தில் வீட்டின் முன் ஒரு தூய செப்பு செம்பில் தண்ணீர் வைக்க வேண்டும். அதிலும் வலம்புரி சங்கில் வைப்பது மேலும் சிறப்பு. எமது வீட்டிற்கு வரும் பித்துருக்களின் தாகம் தீர்த்து அனுப்புவது எமது கடமையாகும்.
குடும்பத்தில் கணவனுக்கு ஏழரை அல்லது அட்டம சனி இருக்கும்; மனைவிக்கு ராகு / கேது திசை நடிப்பில் இருக்கும்; பிள்ளைகளுக்கு சனிதோஷம் இருக்கும். இப்படி எல்லாவிதத்திலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் படாதபாடு படுத்திக்கொண்டு இருக்கும்...
வரும் மஹாளய அமாவாசை முதல் 9 நாட்களும் (நவராத்திரி முதல்) நவ துர்கைக்கும் நவ கன்னியர்க்கும் அகன்ற தீபம் போட்டு வர துன்பங்கள் தீரும். கிரக பீடைகள் விலகும்.

தானம், தர்மம் என்றாலே எமது நினைவுக்கு வருபவன் மாவீரன், சூரியபுத்திரன் கர்ணன். கர்ணன் தனது வாழ்வில் செய்யாத தானமில்லை. சகல தானங்களும் செய்தவன்.. ஏன், புண்ணியதானமே செய்தவன். அப்படிப்பட்டவன் அன்னதானம் செய்யவில்லை. கர்ணன் மேலுலகத்தில் தனது தந்தையான உலகிற்கே உணவை அளிக்கும் பகவான் சூரியநாராயணன் மற்றும் தனது தமையன் யமனின் ஆசிபெற்று தட்க்ஷிணாய புண்ணிய காலத்தில் பூலோகம் வந்து 14 நாட்கள் அன்னதானம் செய்ததாக கூறப்படுகிறது. 
அப்படிப்பட்ட உயர்வான தானம் அன்னதானமாகும். அன்ன தானம் என்றால் மனிதர்களிற்கு மட்டுமில்லாது அனைத்து உயிர்களுக்கும் செய்யலாம். பசி அறிந்தவனிற்குத்தான் பசியின் கொடுமை தெரியும்... எப்பொழுதும் பிரதிபலன் பாராது தானம் செய்யுங்கள். அப்போதுதான் புண்ணிய பலன்களுடன் இறை ஆசி கிடைக்கும். எதனையும் எதிர்பார்த்து தான தர்மங்கள் செய்பவர்களுக்கு அதன் பலன் மட்டுமே கிடைக்கும். ஏன், சிலர் தானதர்மம் செய்து விட்டு அந்த புண்ணிய பலன்களை எல்லாம் இறைவனிற்கே "சிவார்ப்பணம்", "கிருஸ்ணார்ப்பணம்" என்று அர்பணித்துவிடுவர். அவர்களிற்கு புண்ணிய பலன்கள் கிடைப்பதில்லை. இறைவனின் அன்பு கிடைக்கும். வாழ்வில் கஷ்டப்படுவார். இறைவன் கூட நின்று தானும் அந்த கஷ்டத்தினை வாங்கி பங்குபோட்டு கொள்வான். ஒருநிலையில் சகல துன்பங்களையும் பொடிப்பொடியாக்கி அருள்செய்து தன்னுடன் கைலாயத்தில் / வைகுண்டத்தில் வைத்திருப்பர். அதனை விட பெரிய பாக்கியம் வேறு என்ன உள்ளது? கூறுங்கள்...
இனி ஜோதிட தகவலிற்கு வருவோம்... சில கிரக கோளாறுகளுக்கு பின்வரும் (அன்ன)தானம் தானம் செய்வது நல்லது.
சந்திரன் கெட்டு இருப்பவர்கள், சந்திரன் நீசமாக இருப்பவர்கள் கொஞ்சமா இளநீர் சேர்த்து பச்சரிசி தவிடு உடன் வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுக்க அந்த வாயில்லா ஜீவன் உங்களை வாழ்த்தும்.
மேலும் கருப்பு நிற காராம்பசு - சனி, ராகு கெட்டு இருப்பவர்கள்.
சிவப்பு நிற காராம்பசு - செவ்வாய், கேது கெட்டு இருப்பவர்கள்.
தூய வெள்ளை நிற காராம்பசு - சந்திரன், சுக்கிரன் கெட்டு இருப்பவர்கள்
பறவைகளுக்கு நெற்பொரி, தானியங்கள் தானம் செய்வதும் மீன்களுக்கு பொரி தானம் செய்வதும் நல்ல பலன்களை தரும்

நான் ஒன்றை குறிப்பிடுகிறேன். என்னிடம் தட்சிணை செலுத்தி ஜாதகம் பார்பவர்களாக இருந்தாலும் சரி, எனது வாசகர்களாக இருந்தாலும் சரி; நான் குறிப்பிடும் எளிய பரிகார முறைகளை கடைப்பிடித்து நற்பயன் அடையுங்கள். என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்களிற்கும் நான் கூறிவருவது என்னவென்றால் எனது பதிவுகளை FACEBOOK - "ஜோதிட கேள்வி பதில்" குழுவிலும் / எனது facebook timeline யிலும் / எனது facebook page யிலும் / எனது இணையத்தளத்திலும் தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள் என்று...

Hariram thejus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக