ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

ஆன்மீக ஜோதிட வழிகாட்டி பதிவு.

மிகவும் முக்கியமான பதிவு!!!
இதுவே அடிப்படை... இதுவே உயர்நிலை...
ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும்?
இரண்டே இரண்டு விடயம்தான்...
• எது நமக்கு கிடைக்கும்.. எது நமக்கு கிடைக்காது என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஏனெனில் கிடைக்காத ஒன்றிற்காக நாம் போராட வேண்டியநிலை ஏற்படாது. எது ஜாதக பிரகாரம் கிடைக்காதோ; அது நிச்சயமாக கிடைக்காது. நான் என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்களிற்கு உறுதியாக கூறிவிடுவேன் அதாவது இது கிடைக்கும் அல்லது கிடைக்காது என்று.... ஏனெனில் கிடைக்காத ஒன்றிற்காக செய்யும் வீணான முயற்சிகளை விட்டுவிட்டாலே வாழ்க்கை வெற்றியில் சென்றுவிடும். கிடைக்கும் என்ற விடயத்தில் காலநேரசூட்சுமம் ஊடாக அருமையாக அடைய முடியும்... சொந்தவீட்டு யோகம் இல்லாத ஒருவருக்கு உங்களிற்கு இந்த யோகம் இல்லை என அறிவுறுத்தியும் அவர் கேளாது தனது வாழ்க்கையில் தன்னை ஒறுத்தி பணம் சேர்த்து வீடுவாங்கும் முயற்சியில் ஏமாந்து பணம் இழந்தவர்களை எனக்கு தெரியும். இதேபோலவே வெளிநாடு மற்றும் சொந்தமாக குழந்தை கிடைக்காத நிலை. இவர்களிற்கு ஜோதிடர்களாகிய நாம் சரியாக வழிகாட்டிவிட்டாலே அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால் அதற்கமைய தம்வாழ்வை மாற்றியமைத்து உயர முடியும்...
• இரண்டாவது விடயம் என்னவெனில்; எமக்கு என்ன நடக்க போகின்றது என அறிந்து நம்மை பக்குவப்படுத்தும் நிலை வரும். மற்றும் “எனக்கு ஏன் இப்படி நடந்தது” என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்...
இன்னும் ஒரு விடயம் உள்ளது....
பரிகாரம் எந்தளவுக்கு வேலைசெய்கிறது என்பதனை நிர்ணயிக்க முடியாது. ஆனால் மனம் ஆன்மீக வழி சென்று; பரம்பொருளான இறையருளை பெற்று தரும். அவர் கருணை, அன்பு கிடைக்கும்.... ஜாதகம் உங்கள் நிலையறிந்து உங்களை எவ்வழியிலும் நல்வழிப்படுத்தவே ஜோதிடர்கள் வாயிலாக உங்களுக்கு உரைக்கப்படுகிறது. உங்கள் கிரகங்கள் என்ன சொல்கிறது என பார்த்து அதுசார்ந்த முற்பிறப்பு தவறால் இந்த பிறப்பில் தண்டனை அனுபவிக்கின்றீர்கள் என உணர்ந்து செய்த தவறிற்கு பரிகாரம் செய்வதும் இனி நல்ல பாதையில் செல்வது உங்கள் கையிலே... இதுவே உங்களை இனி காக்கும்... இல்லாவிட்டால் இறைவன் மீதான அதீதஅன்பினால் அவரால் உங்கள் பாவங்கள் தீர்க்கப்பட வேண்டும். அவ்வளவு தூயபக்தி இக்கலியில் ஏற்படுவது மிகமிக அரிது. ஏற்பட்டாலும் இறைவனின் சோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆகவே இயலுமானவரை தர்மவழி சென்று அகத்தில் இறைவனை இருத்தி உத்தமர்களாக வாழ இந்த ஜோதிட கலையினை உபயோகப்படுத்துவீர்களாக...
நன்றி;
தெய்வீகஜோதிடர் ஹரிராம்.

மகாபெரியவாளும் ஒரு ஜோஸியரும்

ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார். “பெரிய குடும்பம், வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படி ரொம்ப கொறைச்சல், ரொம்ப கஷ்டம்..” என்று முறையிட்டார்.

“நீ…. ஒங்கஅப்பா இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?”

"இல்லே….அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்”

"நீ அங்கே இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டுகொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு இரு. பரம்பரையா அம்பாளை பூஜை பண்ணின குடும்பம். மாட்டுக் கொட்டகைல இருங்கோ. அதோட, இன்னொண்ணும் கேளு. எல்லா க்ரஹங்களையும் நன்னா. திட்டறயோன்னோ ! ….உங்க ஜாதகத்ல குரு நீசன், சனி பாபி, புதன் வக்கிரம்!…இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது".

"குரு…ங்கறது பெரிய கிரகம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம்….அவரைப் போய்நீசன், பாபி, வக்கிரம்..ன்னெல்லாம் திட்டக் கூடாது. சனி, சூர்யனோட புத்திரன். ஈஸ்வரபட்டம் வாங்கிண்டவர். அவரைப் போய் பாபிங்கறே! கிரகங்கள் சரியான எடத்ல இல்லை…..கால பலன் சரியில்லைன்னு சொன்னா போறுமே!"

"பொண்பிள்ளை ஜாதக பொருத்தம் பாக்க வரவா கிட்டே “பொருத்தமில்லை” ன்னு நிர்தாட்சண்யமா சொல்ல வேணாமே! பொண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும், பையனுக்கு புத்திர பாக்கியம் கேள்விக் குறிங்கற மாதிரி சொல்லலாம். முப்பது வயசாகியும் நெறைய பொண்கள் கல்யாணம் ஆகாம இருக்கா. அப்பிடிப்பட்டவாளுக்கு வரன், ஜாதகபொருத்தம் பாக்க வந்தா, முடிஞ்சவரை நிராகரிக்காம பதில் சொல்லணும்".

"கல்யாண விஷயத்ல, பொண், பையன் ஜாதகப் பொருத்தத்துக்கு ஜாஸ்தி importance குடுக்காம, குலம், கோத்ரம், மனப் பொருத்தம் இருந்தா போறும். பழங்காலத்ல ஜாதகப்பொருத்தம் அவ்வளவு முக்யமா இருந்ததில்லை”.

ஜோஸ்யர் திருப்தியோடு, “இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்” என்று சொல்லி பிரசாதம் வாங்கிக் கொண்டு போனார்.

கிரகங்கள் வெறும் சடப்பொருட்கள் அல்ல..
சனி ஈஸ்வரன்...

பலரது ஜாதகங்களை பார்க்கும் போது அவர்களிற்கு குலதெய்வம் குற்றம் இருக்கிறது... ஆகவே அனைவருக்கும் பொதுவான ஒரு பதிவு...

பெளர்ணமி அன்று உங்கள் வீட்டில் உணவு சமைத்து அதனை கவனமாக உங்கள் குலதெய்வ கோவில் கொண்டு சென்று அங்கு வைத்து வாழையிலை அல்லது சில்வர் பாத்திரத்தில் நீங்கள் வீட்டில் இருந்து எடுத்து சென்ற உணவை படைத்து வழிபட்டு வாருங்கள். (எவர்சில்வர் பாத்திரத்தில் படைக்க கூடாது.) இதன்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவில் செல்ல வேண்டும். கூட்டுகுடும்பம் என்றால் உத்தமம்...

ந ம சி வா ய ௐ

சரும பிரச்சனைகள் யாரிற்கு ஏற்படும்?


அறிமுகம் :- அலர்ஜி எனும் ஒவ்வாமை, பொடுகு, எக்சிமா, அதிக முகப்பருக்கள், தோல்/உதடு வெடிப்பு, வரட்சி. எனது ஆய்வு முடிவுகளை இங்கு உங்கள் அனைவருக்கும் தருகிறேன்...
1. இந்த skin problemற்கு முக்கிய காரணம் ஒருவர் ஜாதகத்தில் ரா/கே அமைந்திருக்கும் நிலையே ஆகும். இவர்களின் ஆதிக்கத்தில் ஜாதகம் இருந்தால் நிச்சயமாக ஜாதகரிற்கு சரும பாதிப்பு ஏற்படும். உதாரணமாக நாகதோசத்தாரிற்கு...
2. புதன் ராகு அல்லது கேதுவின் பார்வை பெற்றால் அல்லது சேர்ந்து இருந்தல். (ரா/கே தாம் இருக்கும் இடத்தில் இருந்து 3, (6), 11ம் இடத்தினை பாதிக்கும். இதனையே நான் இங்கு “பார்வை” என கூறுகிறேன்.)
3. செவ்வாய் சனி சம்பந்தம் அல்லது செவ்வாய் புதன் சம்பந்தம்...
4. சனி/புதன் நீச்சம் பெற்று பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டிருத்தல்...
5. ஆறாமிடத்துடன் பாம்பு, சனி, புதன் சம்பந்தம்.

பாரம்பரிய ஜோதிடத்தில் கிரகசம்பந்தம் எனும் வார்த்தைக்கு பின்வரும் 5 நிலைகள் (மட்டுமே) பொருந்தும்.
1. கிரகத்தின் பார்வை பெறுவது..
2. ஒரு கிரகத்தின் கேந்திரத்தில் இருப்பது..
3. திரிகோணத்தில் இருப்பது..
4. இருவரும் தங்களின் வீடுகளை பரிமாறிக்கொள்வது.. (பரிவர்த்தனை)
5. இருகிரகங்களும் ஒன்றாக இணைந்திருப்பது..
இந்த ஐந்தையும் தவிர; ஒரு கிரகமானது இன்னொரு கிரகத்துடன் எந்தவகையிலும் தொடர்புறமாட்டாது. இதனையே ஜோதிட மூலநூல்களும் கூறுகின்றன...
வழிபாட்டிற்குரிய தெய்வம் அவரவர் ஜாதகம் பொறுத்தது. தோல்வியாதிகள் உள்ளவர்கள் அதிகமாக தங்கள் உணவில் புதினா எடுத்து கொள்ளுங்கள்...
மேலும்  வரிகள்,
சில கடுமையான தோசங்கள் பரிகாரத்திற்கு கட்டுப்படமாட்டாது. இதற்கு என்னதான் ஹோமம், யாகம், தானதர்மம் செய்தாலும் அது பலன் தராது என்பதை அறிய வேண்டும். நீங்கள் முற்பிறவிகளில் செய்ய பாவங்களை அனுபவிக்கவே இறைவன் தற்போது இந்தநிலையை அளித்துள்ளான். இவை அனுபவித்து தீர்க்க வேண்டிய கர்மாக்களே... ஒரு ஜோதிடரிற்கு; எதற்கெல்லாம் பரிகாரம் கொடுக்க வேண்டும் என்று தெரியும். எல்லாத்திற்கும் பரிகாரம் பரிகாரம் என்று கேட்காதீர்கள்! உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். பரிகாரமும் ஏற்கனவே ரிஷிகளால் சொல்லப்பட்ட பரிகாரங்களே பலிக்கும். நாம் நினைத்ததுபோல எமது அறிவிற்கு செய்யும் பரிகாரம்?? எல்லாம் பலிக்காது...
நன்றி;
ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம் தேஜஸ்

வர்கோத்தமம்

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்! சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார் உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணப் பேருந்து, மாடிப் பேருந்தாக மாறிவிடும்!
பலன்: அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!
லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்! மற்ற பலன்கள்:
சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.
சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்’டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்
செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்
புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.
குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்
சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்
சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்
ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும் கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும் இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம், அல்லது குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது.
ஏழாம் வீட்டு அதிபதி, ராசி & நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான். இதே பலன், பத்தாம் வீட்டிற்கு எனும் போது, ராசியிலும், தசாம்ச சக்கரத்திலும்,
பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்!
வர்க்கோத்தமம் கிரக பலன்கள்
அவரவர் ஜாதக ராசிக்கட்டத்தில் சில கிரகங்கள் மட்டும் ராசி நவாம்சம் இரண்டிலும் ஒரே ராசியில் இருக்கும் . இப்படி அமையும் நிலையைத்தான் "வர்க்கோத்தமம்" என்கிறோம் . இப்படி உள்ள கிரகங்கள் உச்ச பலனை தருகிறது. இவர்களின் தசா காலம் நடக்க ஜாதகர் வெகு சிறப்பு அடைவர் . ஒன்றுக்கு மேற்பட்ட சுபர் பார்க்க யோகம் பன்மடங்காகும் . ஒருவரும் பார்க்கவில்லை எனில் ஏழை குடும்பத்தில் பிறந்தவராய் இருப்பார் . ஆயினும் என்றேனும் ஒருநாள் குப்பை மேட்டில் பிறந்தவர் ஆனாலும் கோபுர உச்சிக்கு செல்வர் .
சிலருக்கு லக்னம் ராசி - நவாம்சம் - திரேக்காணம் மூன்றிலும் ஒன்றாக அமைந்திருக்கும். இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் !! இப்படி பட்டவரை ஜாதக பொருத்தம் பார்க்காமலேயே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறது ஜோதிடம். ஆண் / பெண் இருவருக்கும் இப்படி அமைய அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தெய்வீக அம்சம் கொண்டவர்களாய் விளங்குவர்

லக்னம் வர்கோத்தமம் பெற்று புதன் ஆட்சி / உச்சம் பெற வானசாஸ்திர வல்லுனராவார். லக்னேசன் வர்கோத்தமம் பெற ஆயுள் உள்ள மட்டும் சுகவானாய் விளங்குவார். லக்னத்தில் சுபர் நீச்சம் பெற்று வர்கோத்தமம் பெற இரட்டிப்பு வலு கிடைகிறது (எ.கா. : கடகலக்ன செவ்வாய் / மீனலக்ன புதன் )
லக்னம் / லக்னேசன் / சந்திரன் / சூரியன் இவர்கள் நால்வரில் இருவர் வர்கோத்தமம் பெற இறுதி வரை சுயநினைவுடன் மற்றவர் உதவி இன்றி படுத்த படுக்கையாகாது நிம்மதியாய் திடீர் என்று இறப்பர்
லக்னம் - லக்னேசன் வர்கோத்தமம் பெற மகிழ்வான மண வாழ்வமையும். சூரிய கேந்திரத்தில் சந்திரன் நின்று லக்னேசன் வர்கோத்தமம் பெற அடித்தள வாழ்க்கை முதலே சீரும் சிறப்புடையவராம் காலப்போக்கிலும் உயர்வுண்டு

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

ஆருத்ரா தரிசனம்


பிறப்பே எடுக்காத ( ஆதியும்அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

ஆர்த்ரா = திருவாதிரை

ஆஸ்லேஷா = ஆயில்யம்

அனுராதா = அனுஷம்

ஜேஷ்டா = கேட்டை

தனிஷ்டா = அவிட்டம்

புனர்வஸு = புனர் பூசம்

பூர்வ பல்குனி = பூரம்

உத்திர பல்குனி = உத்திரம்

பூர்வா ஷாடா = பூராடம்

பூர்வ பத்ரா = பூரட்டாதி

உத்ர பத்ரா = உத்திரட்டாதி

இவைகள் எல்லாம் தமிழ் நட்சத்திரங்களுக்கு சொல்லப்படும் வடமொழிப் பெயர்களாகும்.

தமிழ் மொழியில் #திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் #ஆர்த்ரா என்று பெயர். இதுவே #ஆருத்ரா எனப்படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்.

பரதனுக்கு - பூசம்.

லட்சுமணனுக்கு -ஆயில்யம்.

சத்ருக்னனுக்கு- மகம்.

கிருஷ்ணனுக்கு - ரோகிணி.

முருகனுக்கு - விசாகம்.

இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.

ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்*
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவபெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின்நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி உண்ணn நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாததிருவாதிரைநாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்

ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதி தேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.

சிவபெருமானின் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்பது சைவசமயத்தினை அவமதிக்கும் விதமானது.. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை என்பதே சரியானது...

ஓம் சிவாயநமஹ

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.