ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 11 ஜூன், 2017

இருவித பஞ்சாங்கங்கள்



அனைவருக்கும் வணக்கம். கன்னி ராசியில் செவ்வாய் நட்பா பகையா என்று ஒருவர் கேட்டார். அதற்கு “வாக்கியப்படி நட்பு, திருக்கணித படி பகை.” என்று கூறியிருந்தேன்... வாக்கிய பஞ்சாங்கம் சரியா திருக்கணித பஞ்சாங்கம் சரியா? இதற்கு யாராலும் முடிவுகாண முடியவில்லை...
ஜோதிட சாஸ்திரத்தை எமக்கு அருளிய மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகளை அடுத்த எமது தாத்தா, பாட்டன், முப்பாட்டன் என அனைவருமே வாக்கிய பஞ்சாங்கபடியே ஜாதகம் கணித்தனர்; பலன் கூறினர். இன்றும் அனுபவம் மிக்க வயதான ஜோதிடர்களும் , கிராமபுறங்களில் உள்ள ஜோதிடர்களும் வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி கணித்த ஜாதகத்தினையே பார்க்கின்றனர். அவர்களது வம்சாவழி முன்னோர்களும் அதனையே பின்பற்றி வந்தனர். அது ஒரு புறம் இருக்கட்டும்... விஞ்ஞானம் ஒன்று வந்து நன்றாக குழப்பிவிட்டு சென்றுவிட்டது... இன்று சொல்வர் நாளை இல்லையென்பர் விஞ்!ஞானிகள்.. நாம் வழிவழியாக பயன்படுத்திய எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, இப்போது அது தான் சிறந்தது என்று சொல்லவில்லையா? அதுபோலத்தான்... 

வானவியல் (Astronomy) என்ற சொல் வேறு ஜோதிடம் (Astrology) என்ற சொல் வேறு...

வானவியலானது வானவெளியில் குறித்த நேரத்தில் கிரகங்கள் எந்ந நிலைகளில் உள்ளன என்பதை ‪#‎மட்டும்‬ காட்டும். அதனால் தான் திருகணித பஞ்சாங்கத்தினால் துல்லியமாக சூரிய கிரகண நேரத்தினை கூறமுடிகிறது...
ஆனால் ஜோதிடம் என்பது நவ கிரகங்களின் கதிர்வீச்சினால் பூமியில் ஜனித்த குழந்தையின் தாக்கத்தினை அக்குழந்தையின் இறப்புவரையான காலகட்டம் வரை கூறுவதாகும். இங்கு குழந்தை
சூரியனில் இருந்து புறப்படும் ஒளி சுமார் 8 நிமிடத்தின் பின்னரே பூமியை வந்தடைகிறது என்று படித்த ஞாபகம்.
அப்படி இருக்கும் பட்சத்தில் ஜாதகர் பிறந்தவுடன் அவனை அடையும் கதிர்கள் நிச்சயமாக 10 நிமிடத்திற்கு முன்னர் வானவெளியில் இருந்து வந்த கதிர்களேயாகும். இதனால் ஜாதகன் பிறந்த நேரத்தை ஏறத்தாள சுமார் 15 நிமிடங்கள் முன்னதாக போட்டு திருக்கணித முறையில் ஜாதககட்டம் போட ஜாதகனின் கர்ப்பசெல் இருப்பு நீக்கி ஜனனகால இருப்புதிசை சில மாதங்கள் வரை அதிகரிக்கும். அந்நேரத்தில் சந்திரன் நின்ற நட்சத்திர நாதனின் தசா ஆண்டு எண்ணிக்கைபடி ஒவ்வொரு தசாவும் ஜாதகனிற்கு வழமையாக தொடங்கவிருக்கும் தசாகாலத்திற்கும் சிலமாதங்கள் பின்னதாகவே ஆரம்பிக்கும். இது வாக்கிய பஞ்சாங்கம் மூலம் கணித்த ஜாதகத்திற்கு (சற்று) அருகில் செல்லும். அது அந்த ஜாதகரில் விளைவை ஏற்படுத்த சிலகாலம் எடுக்கும். வேறும்பல சூட்சும கணிதங்களிற்கு பிறகு இதன் நிலையானது மேலும் வாக்கிய ஜாதக அமைப்பிற்கு அருகில் கொண்டு செல்ல முடியும். இங்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகமே வெல்கிறது. அத்துடன் இரண்டாவது கோட்பாடாக கிரக கதிர்வீச்சுக்கள் தமது பலனை எம்மில் தர நிச்சயமாக சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்.
  
எனது சிற்றறிவிற்கு தெரிந்தவரை இந்த இரு கோட்பாடுகளையும் உங்கள் முன் வைத்துள்ளேன். இது தவிர ஏராளமான பல கோட்பாடுகள் இருக்கும்.
இறுதியாக, குறிப்பிட்ட நேரத்தில் வானவெளியில் இருக்கும் கிரகநிலைகளை திருக்கணித பஞ்சாங்கம் துல்லியமாக காண்பிக்கும். அதாவது இந்த நேரத்தில் வானவெளியில் கிரகங்கள் எங்கெங்கு உள்ளன என்று காட்டும். இது வானவியல் (Astronomy) துறைக்கே அதிக பொருத்தமானது. கிரகங்களில் கதிர்கள் எம்மை வந்தடையும் நேரத்தையும் அது எம்மில் விளைவை ஏற்படுத்த எடுக்கும் நேரத்தினையும் துல்லியமாக அறிந்தே நேரடியாக ஜோதிட பலன் கூற வாக்கிய பஞ்சாங்கம் எமது மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகளால் தருவிக்கப்பட்டது; ஜோதிட பலன் தசாபுக்தி அந்தர சூட்சும முறையில் துல்லியமாக கூற வாக்கிய பஞ்சாங்கம் உகந்தது என்ற என்னுடைய கருத்தை உங்கள் முன்வைத்துள்ளேன்... வாக்கியம்; வானசாஸ்திரத்தை நேரடியாக பலன்கூறும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது ஆதரவு என்றும் வாக்கியபஞ்சாங்கத்திற்கே... ஆனாலும் நேரநெருக்கடி காரணமாக திருக்கணித பஞ்சாங்க ஜாதகத்திற்கு திருக்கணித முறைப்படி பலன் கூறுவதுண்டு. வாக்கிய பஞ்சாங்கபடி கணித்த ஜாதகத்திற்கு சில விசேட விதிமுறைகள் உண்டு. அந்த உத்திகளை வாக்கிய ஜாதகத்தில் பயன்படுத்தி பலன் கூற வேண்டும். அதன்மூலமாகவே பலன் கூற வேண்டும். ஆனால் பலரோ வாக்கியஜாதகத்திற்கும் பாவகச்சக்கரம் போட்டு திருக்கணித முறையில் கையாளும் உத்திகளை கொண்டு பலன் கூறிவிடுகின்றனர்... 

பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...

உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  hariram1by9@gmail.com

இவன்;
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.

வலுவிழந்த ஜாதகம்


அனைவருக்கும் வணக்கம்.

இருதினங்கள் முன்பு என்னிடம் பலன் அறிய வந்த ஜாதகம். தற்போதுதான் நேரம் கிடைத்து கணித்துகொண்டு இருக்கின்றேன். இந்த ஜாதகத்தில் ஒரு சூட்சுமம் உள்ளது. அதனை இங்கு பகிர்கிறேன்.... (தேவையான தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். ஏனெனில் ஜாதகம் பார்க்க தந்தவரின் அனுமதி இன்றி அவர் ஜாதகத்தினை இங்கு பொதுவாக பதிவிட முடியாது...)

தனுசு லக்கினம், மீனராசி. குரு 4ல் கேந்திரபலம் பெற்று அஸ்தமனமாகி அம்சத்தில் துலாத்தில். கூடவே ராகுவால் சூரியன், சந்திரன், குரு என மூவரும் கிரகணம்... புதன் கும்பத்தில்.

• ஜாதகம் சரிபார்த்தாயிற்று...

• லக்ன, ராசி திருத்தம் செய்தாயிற்று...

• லக்கினம், ராசி இரண்டும் முற்றாக பலமிழந்துள்ளது...

• இப்போது லக்கினத்தினையோ அல்லது சந்திரலக்கினத்தையோ முன்னிறுத்தி பலன் கூற முடியாது.

பின்னர் எப்படித்தான் பலன் அறிவது என நீங்கள் கேட்பது புரிகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜாதகர் கேட்ட கேள்விக்குரிய காரகனை மையமாக வைத்து பலன் அறிய வேண்டும் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக; இந்த நபர் சொத்து பற்றி கேள்விகேட்டுள்ளார். இங்கு செவ்வாய் நிற்குமிடத்தை லக்கினமாக கொண்டு ஜாதகரின் கேள்விக்கு பலன் உரைக்க வேண்டும் என்கிறது பிருகத்ஜாதகம். ஆனால் பலர் ஜோதிட மூலநூல்களில் கூறப்பட்ட விதிகளை அனுசரித்து பலன் கூறுவதில்லை. எடுத்தவுடன் லக்கினத்தினை மையமாக வைத்து பலன் கூற தொடங்கி விடுகிறார்கள். இவர்களது பலன் ஒருகாலமும் குறித்த ஜாதகருக்கு பொருந்தாது... இதனாலேயே “எந்த ஜோதிடர் சொல்வதும் எமக்கு பலிக்கவில்லை” என்று மக்கள் புலம்புகின்றனர். ஆகவே ஜோதிடம் கற்பவர்களே! மற்றும் நவீன?கணினி ஜோதிடர்களே! கணினியை ஒதுக்கி பேனா எடுத்து கணிதம் போட்டு ஜாதகத்தினை சரிபார்த்து ஜாதக திருத்தங்களை முறையாக மேற்கொண்டு அதன்பின் மூலநூல்களில் கூறப்பட்ட விதிகளை அனுசரித்து பலன் கூறுங்கள்... இதுவே உங்களை நாடி வரும் மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவி... அதேபோல ஜோதிடம் பார்க்கும் மக்களே! அதிக கட்டணம் வாங்குபவர், Appointment  கொடுப்பவர்தான் சிறந்த ஜோதிடர் என எண்ணி செல்லாமல் முதலில் அந்த ஜோதிடர் ஜோதிடத்தினை தெளிவாக கற்று உணர்ந்தவரா என அறியுங்கள். பரிஹாரம் எனும் பெயரில் ஆயிர கணக்கில் வசூலிப்பவர்களை தவிருங்கள். வாக்கிய ஜாதகத்தினையே வைத்திருங்கள். திருக்கணித ஜாதகம்/ கம்பியூட்டர் ஜாதகம் எல்லாம் சரிவராது. வாக்கிய பஞ்சாங்க ஜாதகம் பற்றிய ஒரு கட்டுரையினை அடுத்த பதிவில் பார்ப்போம்...

ஜோதிடம் கற்பவர்கள், ஜோதிடர்களிற்கு சில பொறுப்புணர்ச்சிகள் வேண்டும்...

* ஜோதிடம் கற்றவுடன் தம் திறமை என்பதை துறந்து; தாம் கற்றவையாவும் எம் ஜோதிட மூலநூல்களிலேயே உள்ளது என்றும் அவற்றை அருளிய ரிஷிகளும் நம் முன்னோர்களும் நமக்காக விட்டுச்சென்ற ஆசீர்வாதம் எனவும் எண்ண வேண்டும்.

* எந்த ஜோதிடகலையாயினும் அவ்வவ் மூலநூல்களில் தரப்பட்ட விதிகளை, விளக்கங்களை அவமதிப்பது குற்றம் என்பதைவிட துரோகம் எனும் சொல்லே மிக பொருத்தமானது...

* ஜோதிடம் வளர உதவி செய்ய வேண்டும். அதனை சரியான முறையில் எடுத்து செல்ல வேண்டும். சமூகத்தில் ஜோதிடத்தின் புகழை உயர்த்த வேண்டும்.

* ஜோதிடம் கற்பவர் ஒரு அன்னப்பறவை போல இருக்க வேண்டும். குருவை மனதில் சுமந்து பல ஜோதிட தகவல்களை பல இடங்களில் படித்தாலும் பாலையும் நீரையும் பிரித்து பாலை அருந்துவதுபோல சரியான தகவல்களை மட்டும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

* அடிப்படை ஜோதிடம் கற்பவர்கள் மக்கள் கேட்கும் சில சென்சிடிவ்வான கேள்விகளிற்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் மக்களின் ஜாதகங்களிற்கு பலன்கூறி தம்மறிவை வளர்க்க நினைப்பது தப்பு. அது மக்களை பாதிக்கும். ஆகவேதான் குருமூலமாக கற்க கூறுவது... இவர்கள் ஜோதிடர்கள் கூறும் பதிலை/பலனை வைத்து தம் அறிவை உயர்த்தி கொள்ளலாம்.

* இறைவனிற்கு பணிந்து, ஆன்மீகத்துடன் தன்னை இணைப்பவராக ஒரு ஜோதிடர் இருக்க வேண்டும். புண்ணிய பலன்களை தேடுபவராக இருக்க வேண்டும்...

பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...

உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  hariram1by9@gmail.com

இவன்;
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.

சூரியசந்திரர்க்கு மட்டும் ஏன் ஒருவீடு - ஆய்வு கட்டுரை.


அனைவருக்கும் வணக்கம்.

தந்தைகாரகன் சூரியன், தாய்காரகன் சந்திரன். ஒருவரிற்கு ஒருதாய்தந்தை மட்டுமே இருக்க முடியும். ஆகவே சூர்யசந்திரர்க்கு மட்டும் ஒருவீடு என்று சிலரால் கூறப்படுகிறது. இங்கு தாய், தந்தை எனும் அந்தஸ்து பெறும் கிரக காரகத்திற்கும் அவர்கள் உரிமைபெறும் ராசிகளிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை... இதுபோன்ற மேலோட்டமான கருத்துக்களையும் கிரகங்கள் இரு வீடு பெற்ற கதைகளையும் கேட்டிருப்போம்... ஆனால் எனது இந்த பதிவிலுள்ள எண்ணங்களானது வானவியலை அடிப்படையாக கொண்டு உண்மையான காரணத்தை அறிய வேண்டிய முயற்சியின் தேடலாக அமைகிறது...

ஒளிகிரகங்களான சூரியன், சந்திரனிற்கு தலா ஒரு வீடுகள். ஏனைய தாராகிரகங்கள் எனப்படும் புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி சுயமாக ஒளிர்வதில்லை. இவை சூரியனின் ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றன... வானவெளியில் உள்ள பல கிரகங்களிற்கு உபகோள்கள் உள்ளன. அதில் நாம் வசிக்கும் புவியின் உபகோளான சந்திரன் புவிக்கு மிக அருகில் உள்ளது. இதன் ஒளி எனும் கதிர்வீச்சு மனிதர்களிலும் கடல், தாவரம், சமநிலை என புவியின் பல்தரப்பட்ட வஸ்துக்களிலும் செல்வாக்கு செலுத்துகிறது என்பது ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள் கூட அறிவர்... எனவே பூமியில் வசிக்கும் நாம் கிரககதிர்வீச்சு என பார்க்கும்போது சூரியனை அடுத்து சந்திரனே முக்கியத்துவம் உடையதாக உள்ளது. அவ்வாறான சந்திரன் சூரியஒளியில் (மட்டும்) ஒளிர்கிறது.

பூமியில் வசிக்கும் எமது நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது சூரிய, சந்திர ஒளியை பிரதிபலிக்கும் கிரகங்களிற்கு தலா இரண்டு வீடுகளை நமது முன்னோர்கள் அமைத்து கொடுத்துள்ளனர். எத்தனை ஒளிர்வுகிரகங்களின் ஒளியை ஒரு பருப்பொருள் மீது பிரதிபலிக்கின்றதோ அந்த பருப்பொருளை மையமாக வைத்து எடுக்க வேண்டும். எத்தனை ஒளிர்வை பிரதிபலிக்கின்றதோ அத்தனை வீடுகளாக எடுக்கலாம். சூரியன் சுயமாக ஒளிர்கிறது. சந்திரன் சூரியனின் ஒளியில் மட்டும் ஒளிர்கிறது. ஆகவே இருவருக்கும் தலா ஒருவீடுகள் சொந்தமாக உள்ளது. ஏனைய கிரகங்கள் அப்படியல்ல. அவை சூரிய, சந்திர ஒளியில் ஒளிர்கின்றன. எனவே அவை இருவீடுகளிற்கு உரிமை பெறுகின்றன (நாம் பூமியில் இருப்பது கிரக கதிர்களை கணிப்பதால் சந்திரஒளியில் கிரக பிரதிபலிப்பியல்பு உள்ளது.) ஏனைய கிரகங்கள் சந்திரனின் சொந்தவீடான கடகத்திலிரும் சூரியனின் சொந்தவீடான சிம்மத்திலிருந்தும் வரிசையாக தலா ஒரு வீடுகளை கொண்டமையிலிருந்து இதனை உறுதிப்படுத்தலாம். சந்திரஒளிக்கு; நீச்ச கிரகங்கள் கேந்திரத்தில் அதன் நீச்சம் பங்கமடைவதிலிருந்து புவிக்கு அருகில் உள்ள சந்திரனின் ஒளியின் மகத்துவத்தினை நாம் உணர முடியும்.


பூமியின் உபகோள் சந்திரன் போன்று சனியின் உபகோள் குளிகன். இது புவியின்
நேரடியான ஆளுகைக்குட்படாமையால் ஏனைய கிரகங்களின் உபகோள்களிற்கு ஜோதிடத்தை பொருத்தவரை சொந்தவீடுகள் ஒதுக்கப்படவில்லை. ராகுகேதுக்கள் உண்மையில் நாம் நினைப்பதுபோல தொட்டு உணரக்கூடிய திடமான (பருப்பொருளான) கிரகங்கள் அல்ல. அவை சூரியசந்திரரின் நிழல்கள். ஒளியை முன்னிறுத்து பார்க்கும்போது ராகுகேதுக்கள் சூரிய அல்லது சந்திர ஒளியை பிரதிபலிப்பதில்லை. ஆகவே அவைகளிற்கு சொந்தவீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிழல் கிரகங்கள் எனும் ரா/கே இருள் எனும் விரும்பத்தகாத இயல்பால் ஜாதகரை பாதிக்கிறது. ஒரு எளிய உதாரணமாக கடவுள் எனும் ஒளி இருக்கும் இடத்தில் தீயசக்தி(பேய்பிசாசு) எனும் இருள் இருப்பதில்லை. இதனை கடவுள் எனும் ஒளி இல்லாத இடத்தில் தீயசக்தி எனும் இருள் இருக்கும் என அறியலாம். இதுவே ராகுகேது பலன்தரும் முறையாகும். எனவேதான் ஒளிகிரகங்களான சூரிய சந்திரர்க்கு இருளெனும் இவை கடும் பகையாக கருதப்படுகிறது... சிலரிற்கு பகல் உத்தமம், சிலரிற்கு இருளே உத்தமம் என்ற அடிப்படையில் ரா/கே நன்மை தரும் அமைப்பில் உள்ள போது நன்மைசெய்துவிடுகிறது... ராகுகேது பற்றி மேலும் விபரித்தோமேயானால் அது இக்கட்டுரையின் தலைப்பை திசைமாற்றகூடும் என்பதனால் இத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்...

ஜோதிடத்தை பொறுத்தவரை திருவருளும் குருவருளும் கைகூடி சிறிது நேரமெடுத்து சிந்தித்தோமானால் பல அற்புதமான விளக்கங்களும் குழப்பங்களும்? (அதற்கு தீர்வுகளும்) வருவதாலேயே ஜோதிடம் கடலாக உள்ளது போலும்... பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...
உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  hariram1by9@gmail.com
இவன்;
ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.