ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வியாழன், 22 செப்டம்பர், 2016

பித்ருமகாளய பட்சமும் தானங்களும்

எனது அருமை வாசகர்களே.., 
தமிழிற்கு வரும் புரட்டாசி 14 அன்று அமாவாசை மஹாளய அமாவாசையாகும். (ஆங்கிலத்திகதி 30-09-2016)
இக்காலத்தில் எமது முன்னோர்கள் பூலோகம் வந்து எம்மை பார்த்து வாழ்த்திவிட்டு செல்லும் காலமாகும். முன்னோர்கள் மட்டுமில்லை எம்முடன் பழகியவர்கள், நாம் அன்பாக பேணி வளர்த்த பிராணிகள் என எம்மில் அன்புகொண்ட ஆத்மாக்கள் யாவும் எம்மை பார்க்க வரும். இந்த தட்சிணாய புண்ணிய காலத்தில் வீட்டின் முன் ஒரு தூய செப்பு செம்பில் தண்ணீர் வைக்க வேண்டும். அதிலும் வலம்புரி சங்கில் வைப்பது மேலும் சிறப்பு. எமது வீட்டிற்கு வரும் பித்துருக்களின் தாகம் தீர்த்து அனுப்புவது எமது கடமையாகும்.
குடும்பத்தில் கணவனுக்கு ஏழரை அல்லது அட்டம சனி இருக்கும்; மனைவிக்கு ராகு / கேது திசை நடிப்பில் இருக்கும்; பிள்ளைகளுக்கு சனிதோஷம் இருக்கும். இப்படி எல்லாவிதத்திலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் படாதபாடு படுத்திக்கொண்டு இருக்கும்...
வரும் மஹாளய அமாவாசை முதல் 9 நாட்களும் (நவராத்திரி முதல்) நவ துர்கைக்கும் நவ கன்னியர்க்கும் அகன்ற தீபம் போட்டு வர துன்பங்கள் தீரும். கிரக பீடைகள் விலகும்.

தானம், தர்மம் என்றாலே எமது நினைவுக்கு வருபவன் மாவீரன், சூரியபுத்திரன் கர்ணன். கர்ணன் தனது வாழ்வில் செய்யாத தானமில்லை. சகல தானங்களும் செய்தவன்.. ஏன், புண்ணியதானமே செய்தவன். அப்படிப்பட்டவன் அன்னதானம் செய்யவில்லை. கர்ணன் மேலுலகத்தில் தனது தந்தையான உலகிற்கே உணவை அளிக்கும் பகவான் சூரியநாராயணன் மற்றும் தனது தமையன் யமனின் ஆசிபெற்று தட்க்ஷிணாய புண்ணிய காலத்தில் பூலோகம் வந்து 14 நாட்கள் அன்னதானம் செய்ததாக கூறப்படுகிறது. 
அப்படிப்பட்ட உயர்வான தானம் அன்னதானமாகும். அன்ன தானம் என்றால் மனிதர்களிற்கு மட்டுமில்லாது அனைத்து உயிர்களுக்கும் செய்யலாம். பசி அறிந்தவனிற்குத்தான் பசியின் கொடுமை தெரியும்... எப்பொழுதும் பிரதிபலன் பாராது தானம் செய்யுங்கள். அப்போதுதான் புண்ணிய பலன்களுடன் இறை ஆசி கிடைக்கும். எதனையும் எதிர்பார்த்து தான தர்மங்கள் செய்பவர்களுக்கு அதன் பலன் மட்டுமே கிடைக்கும். ஏன், சிலர் தானதர்மம் செய்து விட்டு அந்த புண்ணிய பலன்களை எல்லாம் இறைவனிற்கே "சிவார்ப்பணம்", "கிருஸ்ணார்ப்பணம்" என்று அர்பணித்துவிடுவர். அவர்களிற்கு புண்ணிய பலன்கள் கிடைப்பதில்லை. இறைவனின் அன்பு கிடைக்கும். வாழ்வில் கஷ்டப்படுவார். இறைவன் கூட நின்று தானும் அந்த கஷ்டத்தினை வாங்கி பங்குபோட்டு கொள்வான். ஒருநிலையில் சகல துன்பங்களையும் பொடிப்பொடியாக்கி அருள்செய்து தன்னுடன் கைலாயத்தில் / வைகுண்டத்தில் வைத்திருப்பர். அதனை விட பெரிய பாக்கியம் வேறு என்ன உள்ளது? கூறுங்கள்...
இனி ஜோதிட தகவலிற்கு வருவோம்... சில கிரக கோளாறுகளுக்கு பின்வரும் (அன்ன)தானம் தானம் செய்வது நல்லது.
சந்திரன் கெட்டு இருப்பவர்கள், சந்திரன் நீசமாக இருப்பவர்கள் கொஞ்சமா இளநீர் சேர்த்து பச்சரிசி தவிடு உடன் வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுக்க அந்த வாயில்லா ஜீவன் உங்களை வாழ்த்தும்.
மேலும் கருப்பு நிற காராம்பசு - சனி, ராகு கெட்டு இருப்பவர்கள்.
சிவப்பு நிற காராம்பசு - செவ்வாய், கேது கெட்டு இருப்பவர்கள்.
தூய வெள்ளை நிற காராம்பசு - சந்திரன், சுக்கிரன் கெட்டு இருப்பவர்கள்
பறவைகளுக்கு நெற்பொரி, தானியங்கள் தானம் செய்வதும் மீன்களுக்கு பொரி தானம் செய்வதும் நல்ல பலன்களை தரும்

நான் ஒன்றை குறிப்பிடுகிறேன். என்னிடம் தட்சிணை செலுத்தி ஜாதகம் பார்பவர்களாக இருந்தாலும் சரி, எனது வாசகர்களாக இருந்தாலும் சரி; நான் குறிப்பிடும் எளிய பரிகார முறைகளை கடைப்பிடித்து நற்பயன் அடையுங்கள். என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்களிற்கும் நான் கூறிவருவது என்னவென்றால் எனது பதிவுகளை FACEBOOK - "ஜோதிட கேள்வி பதில்" குழுவிலும் / எனது facebook timeline யிலும் / எனது facebook page யிலும் / எனது இணையத்தளத்திலும் தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள் என்று...

Hariram thejus

புதன், 7 செப்டம்பர், 2016

கேந்திராபத்திய தோஷம்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற முதுமொழியினை குறித்து நிற்பது இந்த தோஷமாகும்...
ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களை குறிப்பதாகும். இந்த 1ம் பாவமானது ஆயுள் ஆரோக்கியம், குண அமைப்புகளையும்; 4ம் பாவமானது ஒருவருக்கு உண்டாகக் கூடிய சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, வீடு மனை யோகம், வண்டி வாகன யோகம் கல்வி, தாய்,தாய் வழி உறவுகளால் உண்டாக கூடிய பலன்கள் போன்றவற்றையம்; 7ம் பாவமானது ஒருவருக்கு உண்டாக கூடிய மண வாழ்க்கை, நட்பு கூட்டுத்தொழிலில் உண்டாக கூடிய பலன்களையும்; பெரும் கேந்திரமான 10ம் பாவமானது தொழில் வியாபாரம் உத்தியோகம் பற்றியும் கூறும். பொதுவாக கேந்திர ஸ்தானங்களில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நற்பலன்கள் உண்டாகிறது என பார்க்கின்ற போது பாவ கிரகங்கள் அமைந்திருந்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படுகிறது. சுப பலனை தரக் கூடிய சுப கிரகங்களான குரு, புதன், சுக்கிரன்,சுபச்சந்திரன் (குறிப்பு :- வளர்பிறையில் எல்லா நிலைகளிலும் சந்திரன் சுபராக இருப்பதில்லை... இதுபற்றி முன்னரே ஒரு இட்டுள்ளேன்.) சுப கிரகங்களின் கேந்திர ஸ்தானங்களில் இருக்கும்போது நற்பலனை தருவதற்கு பதில் கேந்திராபத்திய தோஷத்தை ஏற்படுத்தி நற்பலன்கள் உண்டாகத் தடையை எதிர் கொள்ள நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக லக்கினம் தவிர தனது சொந்த கேந்திரவீட்டில் தனித்து ஆட்சிப் பெறும் போது அதன் திசா புக்தி காலங்களில் பல்வேறு வகையில் சோதனையான பலன்களை அடைய வேண்டியிருக்கிறது.
இயற்கை பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது மற்றும் அசுப சந்திரன், பாவருடன் இணைந்த புதன் கேந்திர ஸ்தானகளிற்கு அதிபதியாகி இன்னொரு கேந்திரஸ்தானத்தில் இருந்தால் கெடுபலன் தருவதில்லை.
கேந்திராதிபத்திய தோசத்தினை வலிமையாகவும் கடுமையானதாகவும் வழங்குவதில் முதலாமவர் குரு. அடுத்து புதன்.
லக்கினத்தில் கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் இருப்பது தோஷமில்லை. ஏனெனில் லக்கினம் முழுமையான கேந்திரம் இல்லை. அது கேந்திர திரிகோண ஸ்தானங்களினால் ஆக்கப்பட்டது.
இவை கேந்திராதிபத்திய தோஷம் பெற்று கேந்திரத்தில் தனித்து அமரும் போது கடுமையான தோசத்தினை வழங்கும்; இருப்பினும் பாவருடன் சேர்ந்து கேந்திரத்தில் அமரும் போது தமது தோச வலிமையினை குறைக்கும். கேந்திராதிபத்திய தோஷம் அடைந்த கிரகங்கள் தாம் இருக்கும் கேந்திர ஸ்தானத்தினை கெடுக்கும். அவற்றின் பலன்களை தாமதிக்கவோ அல்லது நிராகரிக்கவோ அல்லது அதில் பிரச்சினைகளையோ அல்லது அதில் குறைபாட்டினையோ வைத்துவிடும்.
தற்போது நாம் 12 லக்னங்களிற்கும் கேந்திர ஸ்தானம் எது எனவும் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த லக்னத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதனை தெளிவாக பார்ப்போம்.
மேஷ இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4ஆம் வீடான கடகமும் 7ஆம் வீடான துலாமும், மகரமும் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றிருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள் சொந்த வீடு வாகனம் அமையத் தடை, சுக போக வாழ்க்கைக்கு இடையூறுகள் உண்டாகிறது. அது போல 7ம் வீடான துலாத்தில் சுக்கிரன் ஆட்சிப் பெற்றிருந்தால் மண வாழ்க்கை விரைவில் அடையத் தடை அப்படி அமைந்தாலும் நிம்மதியில்லாத நிலை உண்டாகிறது. கூட்டு தொழிலில் பிரச்சனைகள் நல்ல நண்பர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. அதேபோல (சுப) சந்திரன் 7 இல் நிற்பதும், 10இல் நிற்பதும்; சுக்கிரன் 4இல் நிற்பதும், 10இல் நிற்பதும் கேந்திராதிபத்திய தோசத்தினை தரும்.

ரிஷப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்துக் கொண்டோமானால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகும். இந்த வீட்டு அதிபதிகளில் லக்னாதிபதி சுக்கிரன் மட்டுமே சுபராவார். அவர் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். இதனால் ரிஷப லக்னகாரர்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டாவதில்லை.
மிதுன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 க்கு அதிபதியாக புதன் பகவானும் 7,10 இக்கு அதிபதியாக குரு பகவானும் உள்ளார்கள் . லக்னத்தில் புதன் ஆட்சிப் பெற்றால் லக்னாதிபதி என்பதால் நற்பலன்களையே உண்டாக்குவார். அதுவே 4ல் ஆட்சி உச்சம் பெற்றால் எதிலும் தடை தாமதங்கள், வீடு வாகனம் வாங்க தடை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாவதில் இடையூறுகள் உண்டாகும். அது போல 7 இல் குரு ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சனைகள். கூட்டு தொழிலில் சங்கடங்கள் ஏற்படுகிறது. 10இல் குரு ஆட்சிப் பெற்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகி தொழில் உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடுகிறது-. புதன் ஏதாவது ஒரு பாவ கிரக சேர்க்கைப் பெற்றிருந்தால் நற்பலன் உண்டாகிறது. அதேபோல குரு / புதன் தனது எதிர் வீட்டில் இருப்பதும் தோசத்தினை தரும்.

கடக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் 4 இல் ஆட்சி பெற்றால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாவதுடன் பாதகாதிபதி என்ற காரணத்தாலும் அளவு கடந்த சோதனைகளை சந்திக்க நேரிடுகிறது. சந்திரன் லக்ன கேந்திரம் பெறுவது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. சுக்கிரன் 7, 10 இல் இருப்பதும் கேந்திராதிபத்ய தோஷத்தினை தரும்.
சிம்ம இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10இல் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் தோஷம் உண்டாகி தொழில் உத்தியோக ரீதியாக பாதிப்புகளை அடைய நேரிடும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. சுக்கிரன் 4, 7 இல் இருப்பதும் கேந்திராதிபத்ய தோஷத்தினை தரும்.
கன்னி இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறுசிறு இடையூறுகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 4இல் குரு ஆட்சி பெற்றால் சுக வாழ்வில் தடை வீடு வாகனம் வாங்க இடையூறுகள் உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 7இல் குரு ஆட்சிப் பெற்றால் மணவாழ்வில் பிரச்சனைகள் கூட்டு தொழிலில் தடைகள் உண்டாகும். 10இல் புதன் ஆட்சிப் பெறுவது நல்லதல்ல என்றாலும் புதன் ஏதாவது ஒரு பாவ கிரக சேர்க்கை பெற்றிருந்தால் நற்பலன்களையே வழங்குவார். அதேபோல குரு / புதன் தனது எதிர் வீட்டில் இருப்பதும் தோசத்தினை தரும்.
துலா இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு இலக்னாதிபதி அதிபதி சுக்கிரனாவார். 10ஆம் அதிபதி சந்திரனாவார். சுக்கிரன் ஆட்சிப் பெற்றால் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். சுப சந்திரன் ஆட்சி பெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்கள் தொழில் வியாபார ரீதியாக இடையூறுகள் உண்டாகும். அதுவே அசுப சந்திரனாக இருந்து விட்டால் நற்பலன்களே உண்டாகும். அதேபோல அசுப சந்திரன் 4, 7இல் இருப்பதும் தோசத்தினை தரும்.
விருச்சிக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ஆம் அதிபதி சுக்கிரன் மட்டுமே சுப கிரகமாவார். சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்றால் மண வாழ்வில் தேவையற்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும் அது மட்டுமின்றி காரகோ பாவ நாச ரீதியாகவும் களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெறுவது நல்லதல்ல. இதனால் திருமண நடை பெற தடை தாமதங்களும் உண்டாகும். தாமதித்து திருமணம் அமையும் அதன் பின்னர் நற்பலன் உண்டாகும். அதேபோல சுக்கிரன் 4, 10 இல் இருப்பதும் தோசத்தினை தரும்.

தனுசு இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 இக்கு அதிபதியாக குருவும் 7,10 இக்கு அதிபதியாக புதனும் உள்ளனர். கேந்திர ஸ்தானங்கள் அனைத்தும் சுபர் வீடாக இருப்பதால் கேந்திராதிபத்ய தோஷத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. 1இல் குரு ஆட்சி பெறுவது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 4இல் ஆட்சிப் பெற்றால் சுகவாழ்வில் பாதிப்பு, வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்குவதில் தடைகள், கல்வியில் இடையூறுகள் உண்டாகும். 7,10இல் புதன் ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் இடையூறுகள், திருமணம் நடைபெற தடைகள், தொழில் வியாபார உத்தியோகரீதியாக வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்றாலும் புதன் பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதேபோல குரு / புதன் தனது எதிர் வீட்டில் இருப்பதும் தோசத்தினை தரும்.
மகர இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுப கிரக சுக்கிரன் 10 இல் ஆட்சிப் பெற்றால் தொழில் வியாபார ரீதியாக வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் அவர் திரிகோண ஸ்தானமான 5 க்கும் அதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்த மாட்டார். சந்திரன் 7ஆம் அதிபதி என்பதால் ஆட்சிப் பெற்று அமைந்து விட்டால் மனக்குழப்பம், மண வாழ்க்கை ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் அசுப சந்திரனாக இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதேபோல அசுப சந்திரன், சுக்கிரன் 4, 7, 10 இல் இருப்பதும் தோசத்தினை தரும்.
கும்ப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4 ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்தால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகி சுக வாழ்வு உண்டாக தடை, இல்வாழ்வில் பிரச்சனை, பெண்களால் இடைஞ்சல்கள் உறவினர்களால் வீண் மனக்கவலைகள் உண்டாகும். அதேபோல சுக்கிரன் 7, 10 இல் இருப்பதும் தோசத்தினை தரும்.
மீன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4,7,10 ஆம் அதிபதிகள் சுபர்கள் என்பதால் 1இல் குரு ஆட்சிப் பெற்றால் சிறிது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 10இல் ஆட்சிப் பெற்றால் தொழில் உத்தியோக ரீதியாக இடையூறுகள் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும். 4,7ல் புதன் ஆட்சிப் பெற்றால் சுக வாழ்வு உண்டாவதில் தடை வீடு வாகனம் அமைவதில் தடை உண்டாகும். மண வாழ்க்கை அமைவதிலும் தாமதம் ஏற்படும். இல்வாழ்க்கை ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும். அதுவே புதன் பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் ஒரளவுக்கு கெடு பலன் குறைகிறது-. குறிப்பாக அந்தந்த கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் தான் பாதிப்புகள் அதிகமாகிறது. ஜென்ம இலக்னம் கேந்திர ஸ்தானம் என்றாலும் இலக்னாதிபதியாக இருந்து ஆட்சிப் பெற்றால் பெரிய கெடுதல்களை ஏற்படாது. அதேபோல குரு / புதன் தனது எதிர் வீட்டில் இருப்பதும் தோசத்தினை தரும்.
நன்றி,
வணக்கம்.

சனி, 3 செப்டம்பர், 2016

ஜோதிட பலன்களை பொய்யாக்கும் திதிசூனியம்

ஜோதிடத்தில் குறிப்பிட்ட திதிகளில் அமாவாசை, பெளர்ணமி தவிர ஏனைய 14 திதிகளில் பிறந்தவர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது. இவைகளை கவனிக்காமல் பலன் சொல்லும் போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை. ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது. திதிசூனியம் பெற்ற கிரகம் உச்ச நிலையில் இருந்தாலும் நற்பலன் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களையும் செய்வதில்லை. ஜாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 3 பகுதிகளாக பிரித்து விளக்கம் கீழே தந்துள்ளேன்.

1. விதிகளும் கோட்ப்பாடுகளும்
-----------------------------------------------
ராசி அதிபதி திதி சூன்யம் அடைகிறது. திதி சூன்யம் ஏற்பட்ட ராசி அதிபதிகள் தங்களது சக்தியை இழக்கிறார்கள். ஜாதகப்படி உள்ள நன்மைகளை தர மறுத்து; தீமைகளை புரிகின்றனர்.
சூன்யமடைந்த கிரகங்கங்கள் நலம் தரும் பாவங்களான, 1,2,4,5,7,9,10,11 இல் இருந்தால் நன்மை தருவதில்லை. ஆனால் அவை லக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களான 3,6,8,12 இல் இருந்தால் நலம் தரும். வக்கிரம் ஆனாலும் நல்ல பலன் கொடுக்கும்.
திதி சூன்யம் அடைந்த கிரகங்கள், பகையானாலும்: நீச்சம் பெற்றாலும், பாபிகளுடன் இருந்ததாலும், இயல்பான பலன்கள் அதாவது காரகப் பலன்கள் அதிகமாகவே கொடுக்கும். திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது உடன் இருந்தாலும் தோசம் இல்லை.
அஸ்தங்கதம் அடைந்தாலும், வக்ரமாக இருந்தாலும்; பகை, நீச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திலிருந்து 3,6,8,12 இருந்தாலும் மேசம், விருச்சிகம், சிம்மம், கும்பம், ஆகிய
ராசி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.
பாபருடன் கூடி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.
எனவே திதி சூன்யம் பெறும் ராசிகளின் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது.
அதை போல் ஒரு திதி சூனியம் பெற்ற கிரகம் மற்றொரு திதி சூனிய ராசியில் இருந்தால் அந்த கிரக காரகம் வெகுவாக பாதிக்கபடும்
திதி சூனிய ராசியில் கிரகம் ஏதாவது சிக்கினால் அக்கிரகம் காரகம் வகிக்கும் விஷயங்களில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் திதி சூனியம் அடைந்த பாவமும் பாதிக்கப்படும்.

2. திதி சூனிய ராசியில் உள்ள கிரகம் மற்றும் அந்த ராசி அதிபதியின் பலன்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
சூரியன் : தகப்பனாருக்கு தோஷம். தந்தையுடன் உறவு பாதிக்கப்படும், தந்தையின் உடல் நலமும் கெடலாம். ஜாதகரின் கண் பாதிக்கப்படலாம். அரசு வழியில் தொந்தரவு இருக்கும்.
சந்திரன் : தாய்க்கு தோஷம், தாயாரின் அன்பை பெற முடியாமை,மன அமைதி இருக்காது, மந்த புத்தி, புத்தி சாமர்த்தியம் இருக்காது, நீரில் கண்டம், பிரயாணங்களில் சிக்கல் ஏற்படும்.
செவ்வாய் : சகோதரருக்கு தோஷம், உடன் பிறப்புகளால் நன்மை இல்லை, தைரியக் குறைவு, இரத்த சம்பந்தமான வியாதி, மித மிஞ்சிய காமம் அல்லது வீரியக் குறைவு, நாத்திகர்,.
புதன் : கல்வியில் தடை, தாய்மாமன் வர்க்கம் சுகப்படாது, சோம்பேறி, கடின உடல் உழைப்பில் ஈடுபட இயலாது.
குரு : கல்வியில் தடை, தீய சிந்தனைகள், ஒழுங்கீனம், கோழைத்தனம், நெருப்பால் கண்டம், சரும ரோகம், போலி சாமியார், குரு துரோகம், வஞ்சக மனம், புதல்வர்களால் நன்மை இல்லை.
சுக்கிரன் : திருமணம் தாமதப்படும், கண் கோளாறு, போகம், வாகனம், அழகுணர்வு, கௌரவம் ஆகியவை பாதிக்கப்படும்.
சனி : சனி யோககாரகனாக இல்லாவிடில் நல்ல பலன்கள் உண்டு. வாக்கு வன்மை ஏற்படும். சனிப் பெயர்ச்சிகள் (ஏழரை போன்றவை) மூலம் பெரிய பிரச்சினை எதுவும் நிகழாது. பக்திமானாகவும் நேர்மையானவராகவும் இருப்பார். பெரும் எந்திரத் தொழிற்சாலை, இரும்பு ஆலை போன்றவற்றின் மூலம் அனுகூலம், சம்பாத்தியம் உண்டு. வேலையாட்கள் பலர் இவரிடம் இருப்பார்கள்.
ராகு, கேது சூன்ய ராசிகளில் இருந்தால் அதன் தசாபுத்திகளில் நன்மை தரும்.

3. பிறந்தநேர திதிகளும் சூன்ய தோஷ ராசிகளும் மற்றும் கிரகங்களும்.
------------------------------------------------------------------------------------------------------------
பிரதமை திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் சனி, சுக்கிரன்,
துவிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் -குரு.
திரிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி- மகரம், சிம்மம், கிரகம்-சனி, சூரியன்,
சதுர்த்தி திதியில் சூன்யம் பெறும் ராசி- கும்பம், ரிஷபம், கிரகம் - சனி, சுக்கிரன்.
பஞ்சமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்,
சஷ்டி திதியில் சூன்யம் பெறும் ராசி- மேஷம், சிம்மம் , கிரகம் -செவ்வாய், சூரியன்,
சப்தமி திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, கடகம், கிரகம் - குரு, சந்திரன். அஷ்டமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்,
நவமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய்,
தசமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய்.
ஏகாதசி திதியில், சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் - குரு,
துவாதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் - சனி, சுக்கிரன்,
திரயோதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - ரிஷபம், சிம்மம், கிரகம் - சுக்கிரன், சூரியன்,
சதுர்த்தசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்.
அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு திதி சூன்யதோஷமில்லை.
உதாரணமாக ஒருவர் துதியை திதியில் பிறந்தவரானால் தனுசு, மகரம் சூன்ய ராசிகளாகிறது. அதன் அதிபதிகள் குரு , சனியின் தசாபுத்திகளில் நன்மையான பலன்கள் நடைபெறுவதில்லை.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இயற்க்கை சுபரும் இலக்கின சுபரும்

அனைவருக்கும் எனது வணக்கம்.
பலர் லக்கின சுபரையும் இயற்கை சுபரையும் அதேபோல லக்கின பாவரையும் இயற்கை பாவரையும் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள்... என்னிடம் கேட்கிறார்கள். நானும் நேரமுள்ளபோதேல்லாம் பதில் அளித்து வருகின்றேன். இதுபற்றி ஒரு தெளிவான விளக்க கட்டுரையினை தற்போது பார்ப்போம்...
லக்கின சுபர் என்பது ஒரு லக்கினத்திற்கு ஒரு கிரகம் கேந்திரங்களுக்கோ அல்லது திரிகோணங்களுக்கோ அதிபதியாக வருவதாகும். சில சந்தர்ப்பங்களில் ஒரே கிரகம் ஒரு கேந்திரத்திற்கும் ஒரு திரிகோணத்திற்கும் அதிபதியாகி "லக்கின யோகி" எனும் அதிக சுபத்துவம் வாய்ந்த கிரகமாக இருக்கும். உதாரணமாக கடக லக்கினத்திற்கு செவ்வாய் பகவானானவர் திரிகோணமான 5ம் வீட்டிற்கும் கேந்திரமான 10ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவார். எனவே கடக லக்கினத்திற்கு செவ்வாய் "லக்கின யோகி" என்ற நிலையினை பெறுவார்.
லக்கின பாவி என்போர் லக்கினப்படி 3 / 6 / 8 /12ம் வீடுகளுக்கு அதிபதியாக வரும் கிரகங்களாகும். இவை தீய பலன்களையே செய்யும் என்ற பொதுவான விதி இருந்தாலும் அவரவர் ஜாதக அடிப்படியில் மிகவும் அற்புத பலன்களையும் தரவல்லவை... அதனை இங்கு பதிந்து உங்களை குழப்ப விரும்பாமையால் அதுபற்றி விரிவாக இன்னொரு நாளில் பார்ப்போம்...
இயற்கை சுபர் என்போர் குரு பகவான், சுக்கிரன் பகவான், தனித்த புதபகவான்/ சுவருடன் இணைந்த புதபகவான், வளர்பிறை சந்திர பகவான்.
இயற்கை பாவர் என்போர் சனிபகவான், செவ்வாய் பகவான், பாவருடன் இணைந்த புதபகவான், தேய்பிறை சந்திர பகவான்.
( குறிப்பு - துல்லியமாக திதி அடிப்படையில் முடிவு செய்யப்படின் வளர்பிறை அஷ்டமி முதல், தேய்பிறை சப்தமி வரை சுபசந்திரன். இதுவே தேய்பிறை அஷ்டமி முதல், வளர்பிறை சப்தமி வரை அசுபசந்திரன்.
அதாவது வளர்பிறை சந்திரனின் எப்போதும் சுபராக இருப்பதில்லை. அதுபோல தேய்பிறை சந்திரனின் எப்போதும் அசுபராக இருப்பதில்லை. )

தற்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரக்கூடும். அதாவது ஒரு கிரகம் கேந்திரஸ்தானத்திற்கும்/ திரிகோணஸ்தானத்திற்கும் ஒரு அசுப(மறைவு) ஸ்தானத்திற்கும் அதிபதியாக வந்தால் அந்த கிரகம் லக்கின சுபரா அல்லது லக்கின பாவியா என... அந்த கிரகத்தின் மூலத்திரிகோண ஸ்தானம் எதுவோ; அது அந்த லக்கினத்திற்கு கேந்திர/திரிகோண ஸ்தானமாக வந்தால் அந்த கிரகம் லக்கின சுபர் என்றும் அந்த கிரகத்தின் மூலத்திரிகோண ஸ்தானமானது மறைவு ஸ்தானமாக வந்தால் அந்த கிரகம் லக்கினப்படி பாவர் என்ற அந்தஸ்தினை பெறுகிறது.
உதாணரமாக மேச லக்கினத்திற்கு குருபகவான் திரிகோண ஸ்தானமான 9ம் இடத்திற்கும் மறைவு ஸ்தானமான 12ம் இடத்திற்கும் அதிபதியாக வருகின்றார். மேச லக்கினத்திற்கு 9ம் இடம் தனுசு ஆகவும் 12ம் இடம் மீனமாகவும் அமையும். ஆனால்; குருபகவானின் மூலத்திரிகோண வீடானது தனுசு ஆகும். அந்த தனுசானது திரிகோண ஸ்தானமாக வருகிறது. ஆகவே மேச லக்கினத்திற்கு குரு பகவான் லக்கின சுபர் என்ற நிலையினை பெறுகின்றார்.
இப்பொழுது ஒரு உதாரணம் கொண்டு மேலே நான் சொன்ன கருத்துக்களை ஆராய்வோம். ஒரு பேப்பர், பேனா எடுத்து ராசி சக்கரம் வரைந்து கடக்க லக்கினத்தினை குறித்துக்கொள்ளுங்கள். 5, 10 இடங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள். இனி நான் கூறும் தகவல்களை நீங்கள் கீறிய மாதிரி ஜாதகத்துடன் ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளுங்கள்.
கடக லக்கினத்திற்கு செவ்வாய் பகவானானவர் பஞ்சம ஸ்தானம் எனப்படும் 2ம் திரிகோணமான 5ம் வீட்டிற்கும் கேந்திரங்களிலேயே மிகவும் அதிக பலமுடைய கேந்திரமான 10ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவார் செவ்வாய் பலமாக சுபர் பார்வையுடன் நல்ல இடத்தில் அமரும்போது தனது திசை புக்தியில் யோக பலன்களை அள்ளிக்கொடுப்பார். 5ம் இடத்திற்கு அதிபதியாக வந்தமையால் பூர்வீக சொத்துக்கள், பூர்வீக வீடு, குழந்தைப்பேறு, குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு, ஜாதகருக்கு அதிர்ஷ்டங்கள், குலதெய்வ அருள், விளையாட்டு துறையால் முன்னேற்ற்றம், போன்ற பலன்களையும் 10மிடமாக கேந்திரத்திற்கு அதிபதியாக வருவதால் புதிய தொழில் அமைப்புக்கள், தொழில் பதவியுயர்வு, ஜாதகருக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து, நாலுபேர் மரியாதையுடன் நடந்துகொள்ளும் நிலை, புதிய அமைப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பார்.
இந்த செவ்வாயானவர் ஒருவேளை தனது மூலத்திரிகோண வீடான மேஷத்திற்கு 6 / 8 / 12 இல் மறைந்து இருக்கும்போது கடக லக்கினத்திற்கு செவ்வாயின் ஒரு அற்புத அமைப்பாக தனது மூலத்திரிகோண வீடான மேஷத்திற்கு 6 / 8 இல் மறைவது பாதிப்பு தராது. ஏனெனில் மேஷத்திற்கு 6 இல் மறைந்து கன்னியில் இருக்கும்போது ஸ்தான அடிப்படையில் சில சிறி சிறு இன்னல்களை கொடுத்தாலும் தனது 8ம் விசேட பார்வையால் மீசத்தினை பார்த்து மேஷத்தினை வலுப்படுத்துவதோடு தானும் தனது மூலத்திரிகோணத்துடன் நேரடியாக தொடர்புகொண்டு பலம் பெறுவதால் தோஷமில்லை. அடுத்து மேஷத்திற்கு 8 இல் மறையும்போது தனது இன்னொரு ஆட்சி வீடான விருச்சிகத்தில் இருப்பதால் ""ஆட்சி பலம் பெறுவதால் தோஷமில்லை. தனது மூலத்திரிகோண வீடான மேஷத்திற்கு 12இல் மறைந்தாலும் திரிகோணமான 5ம் இடத்திற்கு 5 இல் இருப்பதால் நல்ல பலன்களையே வழங்குவார். ஆனாலும் இது மேலே குறிப்பிட்ட பலன்களுக்கு அடுத்தபடியான பலன்களையே வழங்கும் என்பதை கவனிக்குக...
இயற்கை முக்கால் பாவியான செவ்வாய் தான் அமரும் இடத்தினை தனது காரகத்துவம் ஊடாக பாதிப்பர் என்ற அமைப்பின்படி கடக்க லக்கினத்திற்கு 5ம் வீடான விருச்சிகத்தில் அவர் ஆட்சி பெறுவது நன்மையினை சற்று குறைக்கும். ஆனாலும் இது குற்றம் என்று கூறுமளவுக்கு இல்லை. ஏனெனின் தனது சொந்த வீட்டில் ஆட்சி நிலையில் இருக்கின்றார். இருப்பினும் தனது மூலத்திரிகோண வீடான மேஷம் கடக்க லக்கினத்திற்கு பெருமகேந்திரமான 10 இடமாக வருவதால் இங்கு "தசம அங்காரகன்" என்று விசேடப்படுத்தி ஜோதிட நூல்களில் குறிப்பிடப்படட நிலையில் அமர்வது மிகவும் சிறப்பானது. மேலும் இயற்கை பாவியான செவ்வாய் கேந்திரத்தில் அமர்வது நன்மை. அதுமட்டுமல்ல... மேஷத்தில் அமரும் செவ்வாய் தனது லக்கினப்படி 5ம் வீடான இடுவது மிகவும் சிறப்பானதாகும். இயற்க்கை வாவியானாலும் தனது வீடடை தானே பார்ப்பது அந்த வீட்டினை பலப்படுத்தும் என்ற அமைப்பின்படி 5ம் இடம் வலுவாகி நல்ல பலன்களை ஜாதகருக்கு கொடுக்கும். மேலும் பத்தில் இருக்கும் செவ்வாய் 5, 10மிட ஆதிபத்தியம் பெற்று லக்கினத்தை பார்ப்பதால் ஜாதகர் கோபக்காரராகவும் அவசரபுத்திக்காரராகவும் இருந்தாலும் சுய கெளரவம் உடைவர், குல தெய்வ ஆசி உடையவர், அதிர்ஷ்டமானவர் என்று சுப பலன்களே நடைபெறும். இந்த ஒரு அமைப்பினை மட்டும் வைத்தே பதிவினை எழுத்திக்கொண்டே போகலாம்... ஆனால் எனது நேர ஒதுக்கீடு காரணமாக இத்துடன் பதிவினை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்.
ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர் ஹரிராம் தேஜஸ் B.Sc, I.Tec.

[ பிற்குறிப்பு :- பதிவு புரியவில்லையெனின் மீண்டும் மீண்டும் ஒரு 3-4 தடவையாவது பொறுமையாக படியுங்கள். நேரம் இல்லாத காரணத்தால் நீங்கள் உங்கள் சந்தேகங்களிற்கு பதில் அளிக்க முடியாத நிலை என்பதால் பதிவினை பலமுறை கருத்தூன்றி படித்த பின்னர் ஏற்படும் சந்தேகங்களை மட்டும் கமெண்டில் கேளுங்கள். எனக்கு நேரம் இருக்கும்போது விடை தருகின்றேன்...]

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.