ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

கர்மா என்பது என்ன?

கர்மா என்பது என்னவென்றால் எமது மனதாலும் உடலாலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் கர்மாக்கள் ஆகும். இதனை நமது ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் 2 வகையாக பிரித்து உள்ளனர். 
1. நல்ல கர்மா/புண்ணியம்.
2. பாவ கர்மா/பாவம். 
நாம் செய்யும் எந்த பாவ, புண்ணிய கர்மாக்களை ஒரு வட்டப்பாதை எடுத்து திரும்பி நம்மிடமே வரும். அது சிறிய பாவ/புண்ணிய கர்மாக்கள் என்றால் சீக்கிரமே அதன் விளைவு நமக்கு ஏற்படும். பெரியளவிலான பாவ/ புண்ணியங்கள் என்றால் அது நம்மை வந்தடைய பல காலம் செல்லும். ஏன் அடுத்த பிறவியில் கூட நம்மை தொடரலாம். இந்த வட்ட பாதையில் அளவு என்பது காலத்தை குறிக்கும். ஓரு நல்லவர் தெரிந்து ஒரு சிறு தீங்கு/கெட்ட விஷயம் செய்வாராயின் அவரிற்கு மிகக்குறைவான காலத்திலேயே அதன் தீயவிளைவு அடிக்கும். அதாவது அந்த சிறு தீங்கு இற்கான தீய கர்மா சிறு வட்டம் போட்டு வந்து நம்மையே அடிக்கும். அதுவே ஒருவர் தெரிந்து பெரிய தீங்கு/கெட்ட விஷயம் செய்வாராயின் அவரிற்கு அதன் தீயவிளைவு திரும்பிவர நீண்டகாலம் எடுக்கும். நாமும் இதனை பார்த்துவிட்டு பாவம் செய்பவன் எல்லாம் நல்ல இருக்கான் நாமதான் இப்படி கஷ்டப்படுகிறோம் என்று நினைப்போம். அவர் செய்த பெரிய பாவத்திற்கான  தீய கர்மா பெரியதொரு வட்டம் போட்டு பல மடைந்து வேகத்தில் வந்து அவரை அடிக்கும் போது  அவரால் தப்பிக்கவே முடியாது. மரண அடி அடிக்கும். மிகவும் அதிகம் எனின் அடுத்தடுத்த ஜென்மங்களில் அதன் பலன் ஏற்படும். சில தீயவர்கள் செய்வதெல்லாம் அநியாயமும் பாவங்களுமாக இருக்கும். அத்துடன் அவர்கள் கோவில் சென்று இறைவனை வழிபடுவர்.  கோவிலுக்கு தானதர்மம் செய்வார்கள். நன்றாக இருப்பார்கள். இதனை பார்க்கும்போது நல்லவர்கள் மனம் சுக்குநூறாகி விடும். அவர்களுடைய இறை சேவைக்காக அவர்கள் பாவம் ஒரு அலுவுக்கு வரும்வரை அந்த இறைசக்தி பாதுகாக்கும். அதற்கும் மிஞ்சினால் இறைவனே தண்டனை வழங்கிவிடுவார் அல்லது அடுத்தடுத்த ஜென்மங்களில் அவர்களால் தப்பிக்கவே முடியாது. என்னதான் அசுரர்கள் சிவ வழிபாடு செய்து பல வரங்கள் பெற்று இருந்தாலும் அந்த இறைவனின் துணையாலேயே அவர்கள் இறுதியில் அழிக்கப்படுகின்றார்கள் என்பதை மறவாதீர்கள்...

இனி இது தொடர்பான ஒரு நீண்ட விளக்கத்தினை பார்க்க உள்ளோம். ஒரு இணைய பதிவில் பல புதிய கருத்துக்களை புகுத்தி பல திருத்தங்களும் மாற்றங்களுடனும் இந்த பதிவு அமைகிறது... எனது வலைப்பக்க வாசகர்களான உங்களுடன் பகிர்கின்றேன்..  அனைவரும் பொறுமையுடன் வாசியுங்கள்...  இக்கட்டுரையின் முடிவுப்பகுதியில் ஜோதிடன் என்ற வகையில் ஜோதிட ரீதியிலும் கர்மா பற்றிய சில கருத்துக்களை பார்த்துவிடுவோம்...

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.

பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.

தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.

அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு
சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.

இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான்.

இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.

போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு. அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ
உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன்
வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.

இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது
அசிங்கம் என்று சித்தனின் மனைவி
அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை
என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து
கொள்ள முடியவில்லை.

எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த
தெய்வத்தை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க
தோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.

அனைத்தையும் பொருமையுடன்
கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.

நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ
செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.

என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே
அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன்
செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே
அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.

அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய
உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும்
பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.

தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.

ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க.விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் "பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை
பார்த்துவிடுவோம்.

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.

இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில் பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த
இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து
ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும்.

எப்படியென்றால்
நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது
உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால்  அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு
மாடோ அல்லது வண்டியோ உங்களை குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.

ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம். இங்கேயும் அதே கர்மவினைதான் செயல்படும்.

அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள்
கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும்.

ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு.

எப்படியென்றால் நீங்கள் அதே தெரு
வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது
சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.

இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
உள்ள சேற்றை துடைப்பதற்காக
தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில்
அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு
ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால் அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்ற
து. இதைதான் " தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது " என்பர் பெரியோர்கள். அந்த பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும் நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்த
எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை. இதைத்தான் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"
என்பதை விட்டுவிட வேண்டும்.

ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.

அந்த விதிவிலக்கு என்பது கூட
இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
மட்டும்??

எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி
நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?

எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?

கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான
வினைகள்தான் தற்போது நீங்கள்
அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும். புரிதல் ஏற்படும்போது
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை
நீங்கள் அடையும்போது, உங்களின் 95% கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்
அனுபவித்து விடுவார். காரணம்!!

நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார்.

திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர்
குழாயில் காலை கழுவிவிட்டு
சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர்
பைத்தியகாரன் என்று தோனலாம்.

ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும்
அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர்
அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.

காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது.

 அதாவது அவருக்கு மனம் என்ற
ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்
இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும்
கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "
என்று சொல்லப்படுகின்றது.

ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த
வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள்
சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்
என்ற விதி இருக்கும், ஆனால் இவன்  உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த ஞானி அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண
அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்
தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.

முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர்.

அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!

நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும்.

இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும்.

 "நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.

அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்
கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்க
வேண்டும்.

இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.

மேலும் இப்பதிவு முந்தைய பதிவான கர்மவினையின் தொடர்ச்சி ஆகும்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
மாறிக்கொண்டே இருக்கும். அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல் உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய
வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில் "ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர
ஒவ்வொரு முறையும் இருக்காது.

ஏனென்றால் அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில்
அத்தனையும் அடங்கியும் விடும். இதை புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு.தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி
பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
என்பது அவள் கனவு.

 கடவுளிடமும் இதை
குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும் பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால்
இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.

மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே
மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.

சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு தெரிந்ததெல்லாம் அவனே என்பதால் மறுபடியும் ஒரு வேண்டுதல்!!

இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"
என்று ஒரே ஒருமுறை மட்டும்
வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.

புரியும்படி கூற
வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க
வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால்
ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும்
கர்மவினை இதுதான் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு
இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
தீர்வை நாடுகின்றோம்.

உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி.அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.

எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.

இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர். எப்படியென்றால் உங்கள்
அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.

உங்கள் தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்.ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு
பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!!

எனவே உங்கள்
அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற.உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால்  இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்!!

******************************************************

சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்று கர்மநியதி. கர்மா என்றால் வினை என பொருள்படும்.

வினை என்றால் செயலாகும். ஆகவே, கர்மா என்றால் செயல். கர்மநியதி ஒரு பிரபஞ்சநியதி (universal law).

→ கர்மா (காரணம் – விளைவு)

கர்மா என்ற பிரபஞ்சநியதி, காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஒரு செயலின் காரணம் நன்மையானதாக இருந்தால், அந்த செயல் நன்மையை விளைவிக்கும்.

 அதுவே ஒரு செயலின் காரணம் தீமையானதாக இருந்தால், அந்த செயல் தீமையை விளைவிக்கும்.

→ மூன்றுவகை கர்மா
கர்மா மூன்று வகைப்படும்.

அவை:

1) சஞ்சித கர்மா – முந்தைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள நல்ல மற்றும் தீய கர்மாக்களின் மொத்த மூட்டை தான் சஞ்சித கர்மா.

2) பிராரப்த கர்மா – சஞ்சித கர்மாவின் ஒரு சிறுபகுதி தான் பிராரப்த கர்மா. இது இந்த பிறவியில் அனுபவிக்கவேண்டிய நல்ல மற்றும் தீய கர்மபலன்கள்.

3) ஆகாமி கர்மா – இந்த பிறவியில் செய்யும் நல்ல மற்றும் தீய கர்மாக்கள் ஆகமி கர்மா எனப்படும். இவை பிறவியின் இறுதியில் சஞ்சித கர்மாவோடு சேர்க்கப்படும்.

→நல்ல கர்மா மற்றும் தீய கர்மா

இதுதான் நல்ல கர்மா, இதுதான் தீய கர்மா என்று நிலையாக கூறிவிட இயலாது. செயல் என்பது இடம், சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். ஒருவன் தன்னுடைய செயலின் காரணம் நன்மையானதா தீமையானதா என்று ஆராய்ந்து அறியும் பக்குவத்தை சனாதன தர்மம் புகட்டுகின்றது.

அதற்காக தான் பல புராணங்களும் இதிகாசங்களும் இந்துதர்மத்தில் உள்ளன. மற்றவர்களின் செயல்களால் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் அளப்பரியது.

கர்ணனை பலர் மத்தியில் கேலிசெய்து அவமானப்படுத்தினாள் திரௌபதி, அந்த கர்மவினையின் விளைவால் அவள் பலர் மத்தியில் அவமானப்பட நேரிட்டது.

ஒருதீங்கும் இளைக்காதவனை சுட்டுக் கொல்வது தீய கர்மா, ஆனால் நாட்டையே அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் தீவிரவாதியை ஒரு ராணுவவீரன் கொல்வது தீயகர்மா ஆகாது.

ஏனென்றால், ஒரு ராணுவவீரனின் கடமை என்ன? நாட்டுமக்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்பதே.

அவனின் கடமையிலிருந்து அவன் பின்வாங்கினால், அதுதான் அவனுக்கு தீயகர்மா. இதனால் தான் திருவள்ளுவர், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஓருயிரையும் கொல்லக் கூடாது என்றும்; செங்கோன்மை எனும் அதிகாரத்தில் ”கொடியவர்களைக் கொலைத் தண்டனையால் அழிப்பது பயிர்களைக் காக்க களையைப் பிடுங்குவது போல” எனக் குறிக்கிறார். திருவள்ளுவர் முரணான கருத்துகளைக் கூறுவாரா? இல்லை.

 கொல்லாமை எனும் அதிகாரத்தை சன்னியாசிகளுக்கும், செங்கோன்மை எனும் அதிகாரத்தை அரசர்களுக்கும் இயற்றியுள்ளார்.

எந்தவொரு உயிரையும் கொல்லக் கூடாது என்பது சன்னியாசிகளின் தர்மம்; நல்லவர்களைக் காப்பதற்காக தீயவர்களை அழிக்கவேண்டும் என்பது அரசனின் தர்மம். (அரசன் – நாட்டின் தலைவன்; சன்னியாசி – உலகவாழ்வை துறந்தவன்)
ஆகவே, ஒரு செயலை விட அந்த செயலின் பின்னால் இருக்கும் காரணம் தான் மிக முக்கியமாகும்.

ஒரு செயலை எந்த காரணத்திற்காக செய்கிறோம் என்பதை ஆராயவேண்டும். அந்த செயல் சுயநலமற்றதாக இருக்கவேண்டும்; எந்த அப்பாவி உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காததாக இருக்கவேண்டும்; தர்மநியதிகளையும் இயற்கைநியதிகளையும் மீறாதபடி இருக்கவேண்டும்; சட்டவிதிமுறைகளை மீறாதபடி இருக்கவேண்டும்.

→ கர்மாவும் மறுபிறப்புச் சுழற்சியும்

ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆன்மாவும் செயல்களின் நல்ல மற்றும் தீய விளைவுகளை அனுபவித்து தீரவேண்டும் என்பது பிரபஞ்சநியதி. சில ஆன்மாக்கள் வரம்புமீறிய தீயசெயல்களின் விளைவுகளை அனுபவிக்க நரகலோகங்களுக்கும், அளவற்ற நற்செயல்களின் விளைவுகளை அனுபவிக்க சொர்க்கலோகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் செயலின்றி இருத்தல் இயலாது. செயல் புரியும் பொழுது அதன் வெளிப்பாடு நல்வினை - தீவினைகளாக உருவெடுத்துப் பின் ஆகாமி வினையில் சேர்க்கப்படுகிறது. நல்வினைகள் - தீவினைகள் ஆகிய இரண்டுமே பிறவியில் ஆழ்த்தவல்லது. முக்தி நிலையான பிறவாமைக்கு இவ்விரு வினைகளும் தடைக் கற்கள். இவ்விரு வினைகளையும் ஒழித்தலே முக்திக்கான வழியாம்.

வினைகளின் பலனை அனுபவிக்க பிறப்பெடுத்தே தீர வேண்டும். அது நல்வினைக்கு கிடைக்கும் நற்பலனாகவும் இருக்கலாம், தீவினைக்கு கிடைக்கும் தீயபலனாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு ஆன்மாவும் ஏற்று வரும் பிராரப்த கர்மாவை (அதாவது இப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாக்கள்) பிறவிக் காலத்திற்குள் முழுவதும் அனுபவித்து விடுகிறது. எனினும் ஆகாமிய வினைகளும் (அதாவது இப்பிறவியில் ஆன்மாக்களின் நல்வினைகள்-தீவினைகள்) பெரும் அளவு சேர்ந்து முடிவில் சஞ்சித வினையாக மாறுவதால் சஞ்சித வினைக் குவியல் என்றும் தீர்வதில்லை.

சஞ்சித வினைகள் முழுவதுமாக அனுபவித்துத் தீர்க்கப்படும் வரை ஆன்மாக்களுக்கு பிறவி தொடர்ந்து வரும். பிறவிகளுக்குக் காரணம் கர்மா. கர்மாவுக்குக் காரணம் பிறவிகள். பிறவிச் சுழற்சி என்று பகவத் கீதை இதையே குறிக்கிறது. எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னரே ஒரு ஆன்மாவுக்கு மானிடப் பிறவி வாய்க்கிறது என்றும் சாத்திரம் அறிவிக்கிறது. ஆயினும், எப்படி கர்மாக்களை எல்லாம் அழித்து பிறவாமை எனும் நிலையை அடைவது?

பகவத் கீதையில் பகவான் அதற்கான வழியை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார்.

எல்லோர்க்கும் நன்மை பயக்கும் காரணங்களை உடைய செயல்களையே புரியவேண்டும். அந்த நற்செயல்களின் பலன்களைத் துறந்துவிட வேண்டும். நல்ல காரியங்கள் செய்வது பின்னாளில் எனக்கு நற்பலன்கள் வருவதற்காக என்று கருதாமல், நல்ல காரியங்கள் செய்வது என்னுடைய ஆத்மதிருப்திக்காக என்ற எண்ணத்தை முழுமையாக கொண்டிருக்க வேண்டும்.

 செயல்களின் பலன்களை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.

இதனால் நம்முடைய கர்மப் பலன்களை எல்லாம் இறைவனே பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதனால் தான், கண்ணன் கர்ணனிடம் வந்து கர்ணன் ஆற்றிய நற்தொண்டுகளுக்கான பலன்களை எல்லாம் தானமாக கேட்டான். தான் ஆற்றிய நற்தொண்டுகளின் பலன்களை எல்லாம் கர்ணன் இறைவனுக்கே தானமாக கொடுத்துவிட்டு, கர்மங்கள் எல்லாம் தீர்ந்து முக்திநிலை அடைந்தான்.

லக்கினத்தில் (பிறப்பு) இருந்து 12ம் பாவகம் (இறப்பு) வரை ஒரே தொடர்ச்சியாக நன்மை தரும் பாவங்களோ அல்லது துஷ்ட ஸ்தானங்களோ அமையவில்லை.ஒருவருக்கு தொடர்ச்சியாக நன்மைகளும் ஏற்படுவதில்லை... தீமைகளும் ஏற்படுவதில்லை.... நன்மையையும் தீமையும் எமது முயற்சிக்கான பலன்களை தரும் பாவங்களும் பாவங்களும் மாறி மாறி அமைந்ததிலிருந்து இதனை விளங்கிக்கொள்ளலாம். இதில் நாம் வாழ்க்கையில் செல்ல தீர்மானிக்கும் எமது உடல், உள, சமூக(சூழ்நிலைகள்) நிலையினை தீர்மானிப்பது லக்கினம் ஆகும். ஆகவே லக்கினம் (பிறப்பு) முதலான மோட்சம் (இறப்பு) வரையான எமது வாழ்க்கைப்பயணத்தினை தீர்மானிப்பது லக்கினம் ஆகும். 12ம் வீட்டிற்கு அடுத்த வீடாக ஜோதிடத்தில் லக்கினம் (1ம் வீடு) உள்ளது. அதாவது 12 இற்கு பின்னர் 13 வராது மீண்டும் ஆரம்பத்தில் இருந்து 1 என தொடங்குகின்றது. எனவே இது முற்பிறப்பில் நாம் வாழ்ந்து மடிந்தபின்னர் இந்த பிறவியில் உலாவரவுவதற்கான சகல அமைப்புக்களும் "கர்மா" எனப்படும் மாபெரும் இயக்க சக்தியினால் ஆளப்படுகிறது.காலபுருஷனுக்கு 4இல் உச்சம் பெரும் குருவானவர் இறைவன், நாம் செய்த புண்ணியங்களை குறிப்பவர். அத்துடன் தர்மம், இறையருளினை குறிக்கும் 9ம் வீட்டிற்கும் இவரே அதிபதி. இவர் காலபுருச தத்துவப்படி 4ம் இடமான கடகத்தில் உச்சம் பெற்று 8, 10 , 12 எனும் பாவங்களை பார்ப்பதால் எமது கஷ்டங்கள், துன்பங்கள், ஆயுள் தோஷம், எமது வாழ்க்கைமுறை, பழைய கர்மாக்களை தீர்த்தல், இறையடி சேர்த்தல் ஆகியவற்றை இறைவனை உண்மையாக நேசிப்பதன் மூலம் பெற முடியும். அத்துடன் கர்மத்தினை குறிக்கும் 10ம் இடமான மகரத்தில் குரு நீச்சம் பெறுவதால் இறையருள் இன்றிய நிலையில் நாம் கர்மாக்களை அனுபவித்து தீர வேண்டும் என்றும் நமக்கு நன்மையான பலன்கள் எல்லாம் அடிபட்டு போகும் என்றும் கூறி நிற்கின்றார். இறையருள் ஜனன ஜாதகம் என்றால்; கோள்சாரமாக தசாபுக்தியினை குறிப்பிடலாம். அதாவது இடையிடையே ஏற்படும் மேலதிக மாற்றங்கள்.....
உண்மையாக மோட்ச்சத்தினை பெற்றவன் அதாவது 12ம் வீடு நிறைவு பெற்றவன் மீண்டும் முதலாம் வீடிற்கு இறங்க மாட்டான். (அதாவது மீண்டும் பிறப்பெடுக்க மாட்டான்.)
இதனை வரிசையாக லக்கினம் முதற்கொண்டு ஒவ்வொரு பாவத்திற்கும் விரிவாக்கி எழுதிக்கொண்டே போகலாம்..

இந்த எளிய ஆன்மீக ஜோதிட கருத்துக்கள் உங்களை தர்ம வழியில் அழைத்துச்செல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்...

நன்றி,
வணக்கம்.

புதன், 12 அக்டோபர், 2016

நவரத்தினகல் பற்றிய வாசகர் ஒருவர் கேள்வியும் எனது பதிலும்...

முகநூலில் "ஜோதிட கேள்வி பதில்" குழு உறுப்பினர் Santhosh Kumar G உடைய கேள்வி - ""ஜோதிட ஆசான்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கங்கள்!!
இன்று ஒரு அதிசயமான நாளாக இருந்தது. நான் பிறந்த அதே தேதியில் அதே வருடத்தில் எனது லக்கினத்தில் பிறந்த ஒருவரை எதிர்பாராவிதமாக சந்தித்த நாள் இன்று. ஒரே லக்கினம் என்பதையும் தெரிந்துக்கொண்டு ஆச்சரியம் அடைத்தேன்.
என்னைப்போலவே அவருக்கும் துலாம் லக்கினம் மற்றும் ராசி. அதுபோலவே லக்கினத்தில் கேது சந்திரன் மற்றும் சனி சேர்க்கை கொண்டவர். இடதுகை நடு விரலில் வைடூரியம் அணிந்துள்ளார்.
எத்தனை நாட்கள் இதை அணிந்துள்ளேர்கள் என்று கேட்டபோது ஒன்றரை வருடமாக அணிந்து வருகிறேன் என்றார். பலன் எப்படி உள்ளது என்று கேட்டபோது அபாரமாக உள்ளதாகவும் தடை தாமதங்கள் விளங்குவதாகவும். சிறுக சிறுக முன்னேற்றம் வருவதாகவும், ஏழரை பாதிப்புகள் பெருமளவில் இல்லை எனவும் சொன்னார்.
ஐயா , எனது கேள்வி என்னவென்றால் , கேது+சந்திரன்+சனி சேர்க்கையில் புனர்பூ தோஷம் பெற்ற ஒருவர் கேதுவின் கல்லை இடதுகை நடு விரலில் அணிந்துகொண்டுள்ளது எப்படி நல்ல பலன்கள் தரக்கூடும் ஐயா?! புனர்பூ தோஷம் தரும் கேதுவின் கல்லை அவர் அணிந்துகொண்டு பின்பு முன்னேற்றம் அடைந்ததாக சொல்வது மகிழ்ச்சி என்றாலும் , தடையை தரும் ஒரு கிரகத்தில் கல்லை அவர் அணிந்து நன்மை அனுபவிப்பது எப்படி சாத்தியம் ஆகும் ஆசான்களே.. தயவுசெய்து விளக்கங்கள் தரவும்.""
எனது பதில் - உங்கள் கேள்விக்கு உங்களுக்கு மட்டும் பயனுள்ளதாக விடை தந்தால் அது உங்கள் ஒருவருக்கு மட்டுமே பயன்படும். எனவே வாசகர்கள் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் பதில் தருகிறேன்...
துலா ராசி. ஜாதகத்திற்கு யோகக்காரர் சனிபகவான். அவர் 4மிடமான கேந்திரத்திற்கும் 5ம் இடமான திரிகோணத்திற்கும் அதிபதியாகி லக்கினத்தில் உச்சம். கூடவே 10 அதிபதி சந்திரன் மற்றும் கேது. சாயாகிரகங்கள் திரிகோணத்தில் நின்று கேந்திர/திரிகோணாதிபதிகளின் தொடர்பு பெற்றால் நன்மை செய்யும் என்று ஒரு விதி உள்ளது. மேலும் கேது உச்ச வலிமை பெற்ற சனியுடன் முரண்படும். ராகு கேதுக்களை பொறுத்த வரை அவர்கள் பெற்ற  நட்சத்திர அதிபதியை விட அவர்கள் இருந்த வீட்டு  அதிபதியையை பிரதானமாக கொண்டு பலன் காண வேண்டும். இப்படி பல விதிகள் பாரம்பரிய வேத ஜோதிட முறையில் உள்ளதால் ஒரு பாரம்பரிய வேத ஜோதிடரால் இதனை பார்த்தவுடன் கூற முடியும். உங்கள் கேள்வியில் ராகு மாற்றும் கேது அமைந்த வீட்டு அதிபதிகளான ,சுக்கிரன் நிலை பற்றி நீங்கள் எதுவும் கூறவில்லை. அதனுடன் வெறும் இரண்டு குறிப்புக்களை மட்டும் கூறிவிட்டு விடை எதிர்பார்ப்பது தவறு...
"கையில் நடு விரலில் வைடூர்யம் அணிந்துள்ளார்" என கூறியுள்ளீர்கள். மேலும் "கேது+சந்திரன்+சனி சேர்க்கையில் புனர்பூ தோஷம் பெற்ற ஒருவர் கேதுவின் கல்லை இடதுகை நடு விரலில் அணிந்துகொண்டுள்ளது எப்படி நல்ல பலன்கள் தரக்கூடும் ஐயா" என்றும் கேட்டுள்ளீர்கள்.. கேதுவுடன் சனி சந்திரன் இணைய அவர்களின் பலனை நிர்ணயிப்பது கேதுபகவான். அவர் நிழல் கிரகம் என்பதால் சுயமாக நிர்ணயிக்கமாட்டார். (ஜோதிட விதிகளை விளக்குவது இந்த பதிவின் நோக்கம் இல்லை என்பதால் மேற்கொண்டு நகர்வோம்.)
முதலில் நவரத்தின கற்களின் தன்மைகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு ஜாதகத்திலும் யோகம் தரும் கிரகங்கள் பலம் குறைந்து இருந்தால் அதனால் யோகம் தர முடியாது. ஆகவே அந்த கிரகங்களை வலிமைப்படுத்த 3 முறைகள் உள்ளன. அந்த 3 முறைகளின் இந்த நவரத்தினகல் முறையும் ஒன்று. நவரத்தின கற்களை துளையிடப்பட்ட மோதிரங்களில் பதிவித்து வலது கைவிரலில் தொடுமாறு அணிய வேண்டும். (சில கற்கள் விதிவிலக்கு. ஏ.கா :- பவளம்.)  open-setting இல். ஒரு கிரகத்தின் தீமையை குறைக்க நவரத்தின கல் அணிய முடியாது. அதுவே சத்தியம்... ராகு கேதுக்கள் சிலவகையில் கெட்டு இருந்தால் அவற்றால் கிடைக்கப்படவேண்டிய உண்மையான நல்ல பலன்களை பெற அவற்றின் கற்களான கோமேதகம், வைடுரியத்தினை பஞ்ச உலோகத்தில் (தங்கம்/ வெள்ளி இரண்டாம் பட்சம்.) செய்து இடது கையில் அணிய வேண்டும் விதி. நமது கைகளில் உள்ள 5 விரல்களும் 5 கிரக ஆதிக்கம் உள்ளவை. ஏ.கா: - மோதிரவிரல் - குரு ஆதிக்கம் உடைய விரல். இங்கு குருவின் புஷ்பராகம் / கனக புஷ்பராக கல்லினை அணியலாம். மேலும் குருவின் நட்பு கிரகங்களின் கற்களையும் அணியலாம். தங்கம் குருவிற்கான உலோகமாகும். எனவேதான் குருவின் ஆதிக்கம் கொண்ட மோதிர விரலில் தங்க மோதிரம் அணியும் பழக்கம் வந்தது. (அந்த காலத்தில் மோதிரத்திற்கு தங்கமே பயன்பட்டதால் தங்க மோதிரம் அணியும் விரலாய் சாஸ்திர ஞானிகள் அறிவுறுத்தியமையால் "மோதிர விரல்" என காரண பெற்றது.) இதனால் குரு பலமடைந்து நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் தற்போது எந்த மோதிரமானாலும் மோதிரவிரல் எனும் குரு விரலில் அணியும் பழக்கம் வந்து விட்டதற்கு காரணம் நாம், நமது முன்னோர்கள் சாத்திர வழியில் இருந்து தவறியாமையும் சாஸ்திரங்களை அறியாமல் போனதுமாகும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் எடுத்துக்கொண்ட தலைப்பில் தொடர்ந்து சில தகவல்களை பார்ப்போம்...
ஒரு கிரகத்தின் கல்லினை எப்போது இடது கையில் அணியலாம் என்றால் ஒரு கிரகம் ஜாதகப்படி நன்மையையும் தீமையும் கலந்து தரும் நிலையில் இருந்தால் அப்போது அதன் தீமைகளை கட்டுப்படுத்த இடது கையில் அணியலாம். ஆனால் தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக கூறுவதால் மக்கள் குழம்பியுள்ளனர்.
நவரத்தின கற்களை இருமுறையில் அணியலாம். புரியும்படி கூறவேண்டும் என்றால்;
1. "ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்கு சாப்பிடுறது போல" என கூறுவோர்களுக்கு சில நிபந்தனைகளின் பேரில் சில கற்களை அணிவ வைப்பது. மேலோட்டமாக ஒரு ஜாதகத்தினை பார்த்தல் "என்ன! இவர் அஷ்டமாதிபதி கல்லினை அணிந்துள்ளாரே?" , "என்ன! இவர் பாதகாதிபதி கல்லினை அணிந்துள்ளாரே?" என கூற வைக்கும். ஆனால் அந்த கல்லினை ஜாதகர் அணிந்ததில் இருந்து ஜாதகருக்கு நன்மைகள் நடக்கும். அனைவரும் வியப்பர்... அப்படி. ஆனால் ஒரு ஜோதிடர் இந்த முறையில் ஜாதகருக்கு கல்லினை தெரிவு செய்யும்போது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை (ஜோதிடர்க்கல்ல... ஜாதகருக்கு...) ஏனெனில் அவரது கணிப்பு சற்று தவறி தவறான நிலையில் துஷ்ட ஆதிபத்தியம் வாங்கிய கிரகங்களின் கல்லினை அணிய வைத்துவிட்டால் அதன் பிறகு ஜாதகர் வாழ்வு இன்னும் மோசமாகிவிடும். அதனால் இந்த முறையினை ஜோதிடர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு அது அவர்கள் ஜோதிட அறிவின் மீதான சந்தேகம்! இந்த முறையானது "பிரதிகூல முறை"யில் கல் அணிதல் எனப்படும். (நான் பாதகாதிபதி கல்லினை அணிந்துள்ளேன். ஜாதகத்தின் பின்புலத்தில் பாதகாதிபதியின் நிலையினை ஆய்வு செய்து அணியலாம் என கணித்து அணிந்துள்ளேன்.)
2. இரண்டாவது முறை "அனுகூல முறை" எனப்படும். ஜாதகப்படி நன்மை மட்டும் தரும் கிரகங்களின் பலத்தினை கூட்ட அந்த நன்மை தரும் கிரகங்களின் கல்லினை அணிவதாகும். இதனையே 99.99 வீதமான ஜோதிடர்கள் பின்பற்றுகின்றனர். அனுகூலமுறையானது பிரதிகூல முறையிலும் சக்தி குறைவான முறையாகும். எனவே நன்மைகளை தர காலம் எடுக்கும். மேலும் கொஞ்சம் கொஞ்சமாகவே நன்மை தரும்.
அஸ்தங்க, நீச்ச கிரகத்தின் கற்களை ஒருவர் அணியக்கூடாது என்று சில ஜோதிடர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் அதனை நான் நிராகரிக்கின்றேன். நீச்ச கிரகத்தின் கல்லினை இடது கையில் பொருத்தமான விரலில் அணிய வேண்டும். அஸ்தங்க கிரகத்தின் கல்லினை வலது கையில் பொருத்தமான விரலில் அணிய வேண்டும். சூரியன் நல்லது செய்ய கடமைப்பட்டு ஆனால் பலவீனமாக இருந்தால் மாணிக்க கல்லினை வலது கையில் சூரிய விரலில் அணிய வேண்டும். எந்தெந்த கற்களை எந்தெந்த விரலில் அணியவேண்டும் என்று கீழுள்ள படம் காட்டுகின்றது. இந்த பதிவானது "அஸ்தங்க, நீச்ச கிரகத்தின் கற்களை அணியலாமா" என்ற உங்கள் கேள்விக்கு "ஆம்" என்ற பதிலினை மட்டும் தருகின்றது. ஒரு கிரகம் அஸ்தங்க, நீச்சம் பெற்றால் முதலில் அந்த கிரகம் உங்கள் ஜாதகப்படி நன்மை செய்யுமா? பாதகம் செய்யாத நிலையில் இருக்கின்றதா என்று உங்கள் ஜாதகத்தினை ஒரு ஜோதிடரிடம் காட்டி; எந்த நவரத்தின கல்லினை அணியலாம் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதனை விடுத்து உங்கள் ராசிக்குரிய கல்லினை கொண்டும் அணிய வேண்டாம். (உங்கள் ராசி ரிஷபம் என்றால் வைரம் அணிவது தவறு, லக்கினப்படி சந்திரன் இருக்கும் ரிஷபம் பாதகம் செய்யும் அமைப்பில் இருந்தால் நீங்கள் வைரக்கல் அணிந்தால் மேலும் சிரமமேபடுவீர்கள்.
நவரத்தின கற்களை பற்றி வேத ஜோதிடத்தில் கூறப்பட்டவை நான் மேலே கூறப்பட்ட சிறு பதிவில் ஒரு வீதம் கூட அடங்கிவிடாது. அனைத்தையும் இங்கு விபரித்துவிடவும் இயலாது. ஆகவே தொலைக்காட்சியில் கூறுவதை கேட்டோ அல்லது உங்கள் ராசிக்குரிய அதிர்ஷ்ட கல் தருகிறேன் என்று நகைக்கடைக்காரர்கள் கூறுவதை கேட்டோ உங்கள் வாழ்வில் மண்ணை அள்ளி போடாதீர்கள்! "உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்" என்பது இங்கேயே பொருந்தும் என்பதனை கூறிக்கொள்கிறேன். உங்கள் ஜாதகத்தினை அலசி நீங்கள் கல் அணிந்து தவறு விடாமல் பாரம்பரிய வேத ஜோதிடப்படி தேர்ந்த ஜோதிடர் ஒருவர் மூலம் சரியான கல்லினை தரமான கல்லினை சரியான முறையில் சரியான நேரத்தில் அணிந்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். எந்தெந்த நவரத்தின கற்களை எந்த விரல்களில் அணியலாம் என்று படத்தில் காட்டியுள்ளேன்.

நன்றி,
பாரம்பரிய வேத ஜோதிடர், ஆலோசகர் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர் ஹரிராம் தேஜஸ்.
hariram1by9@gmail.com





"ஜோதிட கேள்வி பதில்" தளத்தில் அதிக ஜோதிட தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள் - www.facebook.com/groups/vedicastroservice

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.