ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

சனி பிரதோஷம்

நாளை சனி பிரதோஷம் அதை பற்றிய தகவல்

சகல ஐஸ்வர்யங்களை தரும்
சனி பிரதோஷம்..!

🌷 பிரதோஷங்களில் மிகவும் முக்கியமானது சனி பிரதோஷம் ஆகும். திரியோதசி திதியும், சனிக்கிழமையும் சேர்ந்து வருவது சனி பிரதோஷம். ஏனெனில் சிவபெருமான், தேவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே பிரதோஷ நேரம் சனிக்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.

🌷 பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பது முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறுவார்கள். அவர்களைப் போலவே பிரதோஷ நேரத்தில் நாமும் சிவபெருமானை வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

🌷 அதேபோல் எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பு  வைத்து வழிபட்டால் பு ர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.

🌷 பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். அதேபோல் நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி ஆகியவற்றால் பாதிக்கபடுபவர்கள், சனி பிரதோஷ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பம் நீங்கும்.

🌷சனி பிரதோஷத்தன்று, மாலை வேளையில் சு ரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்களும், சு ரிய அஸ்தமனத்திற்கு பின் 24 நிமிடங்களும் உள்ள 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது.

🌷 ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனி பிரதோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது ஆகும்.

🌷 சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபு ரண அருள் கிட்டும். அன்றைய தினம் நந்திக்கும் சிவபெருமானுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவிப்பது நற்பலன்களை தரும்.

ஞாயிறு, 9 ஜூலை, 2017

ரிஷி பஞ்சமி

நாம் சூரியனை வணங்குகிறோம், சூரியன் யாரை வழிபடுகிறார் தெரியுமா?
சூரியன் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. பிரபஞ்சமே சூரியனின் கொடையால்தான் இயங்குகிறது. மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளையும் சூரியனே வழங்குகிறார். அதனால்தான் காலை நீராடிய உடனே சூரியனை வழிபடுகின்றோம். நம்முடைய நன்மைக்காக நாம் சூரியபகவானை வழிபடுகிறோம். ஆனால், நமக்கெல்லாம் நன்மை தருவதற்காக சூரியபகவான் தினமும் யாரை வழிபடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சூரியன்
வான மண்டலத்தில் இருக்கும் சப்த ரிஷிகளைத்தான் சூரியபகவான் வழிபடுகிறார். விண்ணில் ஏழு ரிஷிகளும் சப்தரிஷி மண்டலமாக நட்சத்திர வடிவத்தில் காட்சி தருகின்றனர்.
காஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கௌதமர், பிருகு, வசிஷ்டர் ஆகிய இந்த எழுவர்தான் சப்தரிஷிகள். இவர்களைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
காஸ்யப மகரிஷி:
காஸ்யபர் சப்த ரிஷிகளுள் ஒருவராவார். இவர் மரீசி முனிவரின் புதல்வர் ஆவார். தேவர் குலம், அசுரகுலம் ஆகிய இரண்டும் இவரிடமிருந்தே தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இவரிடம் இருந்து தோன்றிய மனுவில் இருந்து தோன்றியதே 'மனிதகுலம்' என்றும் நம்பப்படுகிறது. இவர் தட்சனின் 13 குமாரிகளையும். விநதை, கத்துரு, பதங்கி, யாமினி ஆகிய நால்வரையும் மணந்ததாகச் சொல்லப்படுகிறது. உலகிற்குத் தேவையான அன்பு, அமைதி, பொறுமை ஆகிய நற்குணங்களைப் போதித்தவர். இவரின் போதனையால்தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் செழிப்போடு இருக்கிறது. அதனால் இந்தப் பிரபஞ்சம் 'காசினி' என்றும் அழைக்கப்படுகிறது.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தந்நோ காஸ்யப ப்ரசோதயாத்'
அத்ரி மகரிஷி:
இவர் படைப்புக் கடவுளான பிரம்மனின் மகனாவார். பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் சொல்லப்படுகிறது. இவரின் மனைவியின்அத்ரி மகரிஷியின் மகன் தத்தாத்ரேயர் பெயர் அனசுயா தேவி. அனசூயா தேவிதான் தன் கற்பின் திறத்தால் மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றினாள். அந்த மூன்று குழந்தைகளின் இணைந்த வடிவமே 'தத்தாத்ரேயர்'. மருத்துவத்தில் சிறந்தோங்கிய ஆத்ரேயரும் அத்ரி மகரிஷியிடம் இருந்து தோன்றியவரே. ரிக் வேதத்தை தொகுத்ததில் இவரின் புதல்வர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ரிக் வேதம், புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்போது, 'அத்ரி- அனசூயைப் போல வாழ வேண்டும்' என்றுதான் வாழ்த்தவேண்டும் என்று கூறுகிறது. சுக்ரீவனுக்கு அடைக்கலம் கொடுத்து வாலியிடமிருந்து காப்பாற்றியவர் அத்ரி மகரிஷியே. இவரிடம் இருந்துதான் சந்திரனும் தோன்றினார்.
நெல்லை மாவட்டத்தில், ஆழ்வார்குறிச்சியில் கடனா நதி அருகே உள்ள அத்ரி மலையில் இவரது கோயில் உள்ளது. அங்கே ஶ்ரீ அனசுயாதேவியுடன் அத்ரி மகரிஷி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தந்நோ அத்ரி ப்ரசோதயாத்'
பரத்வாஜர்:

பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் பரத்வாஜர். தனது மூன்று ஆயுள்களையும் வேதம் பயில்வதற்கே பயன்படுத்தியவர். ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவரும் இவரே ஆவார். இவரின் தவ வலிமையைப் போற்றாத புராணங்களே இல்லை. வேதங்களைப் போன்றே மருத்துவ ஆய்விலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்தவர். இவர் பல்வேறு மந்திரங்களையும் உருவாக்கியுள்ளார். மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் குருவான துரோணாச்சாரியார் பரத்வாஜ மரிஷியின் புதல்வரே ஆவார்.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தந்நோ பரத்வாஜ ப்ரசோதயாத்'
விஸ்வாமித்திரர்:
விஸ்வாமித்திரர் என்று சொன்னால் உலகுக்கு உற்ற நண்பன் என்று பொருள். இன்றளவும் முனிவர் என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருபவர் விசுவாமித்திரர்தான். அந்த அளவுக்கு விசுவாமித்திரரின் கோபம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இவர் குசநாபரின் மகனாவார். ரிக் வேதத்தில் பல பகுதிகள் இவரால் எழுதப்பட்டதே. காயத்ரி மந்திரம் கூட இவர் உருவாக்கியதே.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி என்னும் இடத்தில் இவருக்குத் தனிக்கோயில் உள்ளது.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தந்நோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்'
விஸ்வாமித்திரர்
கௌதமர்:
வேதகால ரிஷிகளுள் இவரும் ஒருவராவார். இன்றளவும் போற்றப்படும் 'தர்மசூத்திரம்' இவரால் இயற்றப்பட்டதே. ரிக் வேதத்தில் இவரது பெயரில் பல்வேறு மந்திரங்கள் உள்ளன. இவரது மனைவியின் பெயர் அகலிகை. அவருக்கு வாமதேவர், நோதாஸ், ஷதானந்தா என்ற புதல்வர்களும் உண்டு.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் மஹாயோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தந்நோ கௌதம ப்ரசோதயாத்'
பிருகு:
இவர் பிரம்மதேவனால், தன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்டவர். ஜோதிட சாஸ்திரத்தின் முதல் நூலான 'பிருகு சம்ஹிதா' இவரால் எழுதப்பட்டதே. இவர் மனைவியின் பெயர் கியாதி. இவருக்கு விததா, ததா, சுக்ரன் என்ற மகன்களும், ஶ்ரீ என்ற மகளும் உண்டு. உலகில் அறத்தைக் காக்கவேண்டும் என்பது இவரின் உன்னத நோக்கமாகும்.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தந்நோ பிருகு ப்ரசோதயாத்'
வசிஷ்டர்:
வேதகாலத்தில் வாழ்ந்த மாமுனிகளில் இவரும் ஒருவர். மிகச் சிறப்பானவற்றையே பாராட்டும் குணம் கொண்டவர். எனவே, இவரிடம் பாராட்டு பெறுவது சிறப்பானது. வசிஷ்ட முனிவரின் மனைவிதான் அருந்ததி . இவர் பெண்களுக்கு அதிகமாக மதிப்பளிப்பவர் . இதைப் போற்றுவதற்காகவே '
ரிஷி பஞ்சமி' வழிபாடு பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவர் ராமாயணத்தில் தசரதனுக்கு அரச குருவாக விளங்கியவர். அனைத்துப் புராணங்களிலும் இவர் போற்றப்படுகிறார்.

'ரிஷி'கள் என்பவர்கள், 'மந்திர த்ரஷ்டா' அதாவது, நாம்  ஜபிக்கும் மந்திரங்களை பிரத்யக்ஷமாகக் கண்டுணர்ந்து நமக்குக் கொடுத்தவர்கள். அவர்களது மகிமை அளவிடற்கரியது.

நாம் நல்வாழ்வு காண உதவும் மந்திரங்கள், ரிஷிகள் நமக்கு அளித்த அருட்கொடை. அவர்கள் தம் தபோவலிமையால் நமக்கு அளித்த மந்திரங்களின் சக்தியால், வாழ்வில் ஏற்படும் இன்னல்களை நாம் வெற்றி கொள்ளலாம். விச்வாமித்ர மஹரிஷி நமக்கு அளித்த 'காயத்ரி  மந்திரம்' ஒன்றே மந்திரங்களின் சக்தியை விளக்கப் போதுமானது.

விநாயக சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதி 'ரிஷி பஞ்சமி' என்றே போற்றப்படுகிறது. அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுகிறவர்கள் வாழ்வில் நலம் பல பெருகும் என்பது திண்ணம். ரிஷிகள் அநேகம் இருந்தாலும் சப்த ரிஷிகள், ரிஷிகளில் சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.இவர்கள், காசியில், சிவபெருமானை வேண்டித் தவமிருந்து நட்சத்திரப் பதவி பெற்று, வான மண்டலத்தில் சப்த ரிஷி  மண்டலமாகக் கொலுவிருக்கிறார்கள்.வானமண்டலத்தில் சனிபகவான் உலகத்திற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை சப்த ரிஷிகளும் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதத்தில், இரவில், காசி விஸ்வநாதரின் கருவறையில் ஏழு பண்டாக்கள்(பூஜகர்கள்) சூழ்ந்து நின்று பூஜை நடத்துவர். இது 'சப்த ரிஷி பூஜை' என்றே சிறப்பிக்கப்படுகிறது. காசி விஸ்வநாதரின் ஆலயத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த பூஜை ஆகும் இது.

துருவ நட்சத்திரத்திற்கு அடுத்தபடியாக, வான மண்டலத்தில் முக்கியத்துவம் பெறுவது சப்த ரிஷி மண்டலமே, இதன் சுழற்சியை வைத்தே, இரவில் நேரம் கணித்து வந்தனர் நமது முன்னோர்.

திருமணங்களில், மிக முக்கியமான சடங்கு, 'அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது'. அம்மிக் கல், வீடுகளில் அக்காலத்தில் சமையலுக்கு உதவும் உபகரணங்களில் ஒன்று. அதை, திருமண வேளையில், மணப்பெண், மிதிப்பதன் பொருள், எத்தகைய சோதனைகள் இல்வாழ்வில் ஏற்பட்டாலும், பெண்ணானவள், மன உறுதியோடு அதை எதிர்கொள்ள வேண்டும். மேலும், குடும்பத்திற்கு புதிதாக வருகிற பெண்ணின் கையிலேயே, குடும்ப கௌரவம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த கௌரவத்தை, அம்மிக்கல் எப்படி, வளையாது நெளியாது நேராக இருக்கிறதோ, அதைப்போல், வளையாமல் காக்க வேணும் என்பதும் இதன் பொருள்.

அந்த வேளையில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது ஐதீகம். அருந்ததி, வசிஷ்டரின் தர்மபத்தினி. சப்த ரிஷி மண்டலத்தில், வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகிலேயே, மிகச் சிறிய அளவில் அருந்ததி நட்சத்திரத்தைக் காணலாம். அது போல் தம்பதிகள் பிரியாது ஒற்றுமையாக இருக்க வேண்டும். உண்மையில் அருந்ததி ஒரு இரட்டை நட்சத்திரம். பார்க்க ஒன்று போல் தெரியும். அதைப் போல் தம்பதிகள் உடலால் வேறு பட்டவர்களாயினும் உள்ளத்தால் ஒன்றாக இருக்க வேண்டும்.
ரிஷி பஞ்சமி விரதத்துக்கான பூஜா விதிகளில், சப்த ரிஷிகளின் பெயர்கள், ஸ்ரீகாஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி என்றே குறிப்பிடப்படுகின்றன. வெவ்வேறு புராணங்களில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், ரிஷிகளின் மகத்துவம் ஒன்றே.

ரிஷி பஞ்சமி விரதம் பெண்களால் செய்யப்படுவது. மிக முற்காலத்தில், ஏற்பட்ட ஆசார விதிகளின் நோக்கம் சுகாதாரம் பேணி நம் ஆரோக்கியத்திற்கு வழி வகுப்பதேயாகும். மாத விலக்கு நாட்களில், பெண்களின் உடல் இயல்பாகவே பலவீனப்படுவதால், நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.  அந்நாட்களில் இப்போது இருப்பதைப் போல் நவீன வசதிகள் ஏதும் இல்லை. எனவே, அந்த நாட்களில், மற்றவரோடு கலந்து  அவர்கள் இருக்கும் போது, அவர்கள் நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதற்கும், அது அவர்கள் மூலமாக மற்றவருக்குப் பரவுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே, அந்த நாட்களில் அவர்களைத் தனிமைப்படுத்தி, வேலை எதையும் செய்ய விடாது செய்திருந்தனர் நமது முன்னோர்.
தவறிப்போய் அவர்களால், இவ்விதிகளுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமாயின், அதை நிவர்த்தித்துக் கொள்ளவே இந்த விரதம் செய்யப்படுகிறது. 'ரிஷி பஞ்சமி' விரதத்தின் மூலம் நாம் வேண்டும் வரங்களைப் பெற்று மகிழ முடியுமாயினும், மிக முக்கியமாக, இந்தக் காரணத்திற்காகவும், பெண்களின் சௌபாக்கியம் அதிகரிக்க வேண்டியும் இந்த விரதம் செய்யப்படுகிறது. மிக வயது முதிர்ந்த பெண்களே, இந்த விரதத்தைச் செய்வது வழக்கம்.
இந்த விரத பூஜைக்கு முன்பாக, 'யமுனா பூஜையைச்' செய்ய வேண்டும். இது பஞ்சமியன்று மதியம் செய்யப்படுவது. இதைச் செய்வதற்கு முன்பாக, வேதம் ஓதிய வைதீகர்களை வைத்து முறைப்படி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பின் வஸ்திர(புடவை) தானம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை சுமங்கலிகள் எடுத்தால் சிவப்பு நிறப்புடவை தானம் செய்வார்கள். சுமங்கலிகள் அல்லாதார் எடுத்தால் ஒன்பது கஜ வெள்ளைப் புடவையில், மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து தெளித்து விட்டுத் தானம் செய்வார்கள். 

அதன் பின்,'நாயுருவி' செடியின், 108 குச்சிகளால் பல்துலக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை பல்துலக்கிய பிறகும் குளிப்பது அவசியம்.

பல் துலக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
ஆயுர் பலம் யசோ' வர்ச்ச: ப்ரஜா: பசு' வஸூநி ச|
ப்ரஹ்ம ப்ரஜாம் ச மேதாஞ்ச தன்நோ தேஹி வனஸ்பதே||

பிறகு,சிவப்பு நிற ஆடை அணிந்து, பஞ்ச கவ்யம் (பசு மாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், கோமயம்  இவை சேர்ந்தது தான் பஞ்ச கவ்யம். இதில் சிறிதளவு எடுத்து, மந்திரங்களைச் சொல்லி உட்கொள்ளும் போது நமது உடலும் ஆன்மாவும் தூய்மை அடைகின்றன.) சாப்பிடவேண்டும். பிறகு முறைப்படி விக்னேஸ்வர பூஜையைச் செய்து, அரிசிமாவில் எட்டு இதழ் கமலத்தை வரைந்து, அதன் மேல் கலசத்தை வைத்து நெய் விளக்கேற்றி பூஜிக்க வேண்டும். கலசத்தில் யமுனை நதியின் நீரையே வைத்துப் பூஜிப்பது சிறந்தது.

மாலையில் ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்ய வேண்டும். விரதம் எடுத்து அன்றே முடிக்க வேண்டுமாயின், காலையிலேயே யமுனா பூஜை முடிந்த பின், விரத பூஜையைச் சேர்த்துச் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. சாஸ்திரப்படி, எட்டு வருடங்கள் (ஒவ்வொரு வருடமும் ரிஷி பஞ்சமி தினத்தன்று)  பூஜை செய்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால் இப்போது, விரதம் எடுத்த அன்றே முடிப்பது வழக்கத்திலிருக்கிறது. சிலர் எட்டு வருடங்களில் ஏதாவது ஒரு வருடத்தில் முடித்து விடுகிறார்கள்.
யமுனா பூஜைக்கு உபயோகித்த கலசத்தை வைத்தே ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்யலாம். அதன் பின், எட்டு முறங்களில் வாயனங்கள் வைத்து தானம் செய்ய வேண்டும்.
வாயனங்கள்:
அதிரசம், வடை, எள் உருண்டை, இட்லி, கொழுக்கட்டை, இயன்ற பழங்கள், வெற்றிலை பாக்கு தாம்பூலம், தேங்காய், தட்சணை முதலியவற்றை வைக்க வேண்டும்.
ஏழு முறங்களில் இவ்வாறு வைத்து விட்டு, எட்டாவது முறத்தில், வாயனங்களோடு,   ஒரு பெட்டியில், ரவிக்கைத் துண்டு, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம், வளையல், பூ ஆகியவற்றையும் வைக்க வேண்டும். வைக்கும் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருப்பது நல்லது. ஏழு முறங்களும் சப்த ரிஷிகளை உத்தேசித்தும் எட்டாவது முறம்(வாயனங்களோடு பெட்டியும் இருப்பது) அருந்ததியை உத்தேசித்தும் தானம் செய்யப்படுகிறது.

முறத்தில் வைக்கும்  பொருட்கள்  ஒவ்வொரு ஊர் வழக்கத்தை ஒட்டி மாறுபடும். மதுரைப் பகுதியில், எட்டு விதப் பழங்கள், எட்டு வித இனிப்புகள் ஆகியவை வடை, எள் உருண்டையோடு வைக்க வேண்டும்.மற்ற பகுதிகளில் மேற்சொன்ன விதத்தில் வைக்கிறார்கள். எட்டு வருடங்கள் பூஜை செய்வதானால், முதல் வருடம் அதிரசம் கட்டாயம் செய்ய வேண்டும். மற்ற வருடங்கள் சௌகரியப்பட்டதை செய்யலாம்.

விரதம் எடுத்தவர்கள் பால், பழங்கள் ஆகியவற்றையே அன்றைய தினம் உணவாக உட்கொள்ள வேண்டும்.
விரதத்தை முடிப்பதானால்:
ரிஷி பஞ்சமி தினத்தன்று, விரதத்தை முடிப்பதாக இருந்தால், சங்கல்ப ஸ்நானத்திற்குப் பின், விரதம் எடுத்து தானங்கள் செய்த பிறகு கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

இதற்கு, எட்டு கலசங்கள் தேவை. அதில் வைக்க, வெள்ளித் தகட்டாலான‌, பிரதிமைகள் எட்டு, வஸ்திர‌ங்கள் எட்டு, தானம் செய்வதற்குத் தேவையானவை ஆகியவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிரதான கலசத்திற்கு மட்டும் ஒரு வேஷ்டியும் துண்டும் கட்டி, மற்றவற்றிற்கு சிறிய வஸ்திரங்களைக் கட்டலாம். அவரவர் வசதியைப் பொறுத்துச் செய்து கொள்ளலாம். சௌகரியப்பட்டவர்கள், கலசத்திற்குள், தங்கள் வசதிக்கேற்றவாறு தட்சணைகள் போடலாம்.

தானம் செய்ய வேண்டியவை:
இந்த விரதம் மிகச் சிறப்பு வாய்ந்த பெரிய விரதமாகும். ஆகவே, இதற்கு பத்து வித(தச) தானங்கள் செய்யவேண்டும். தானங்கள் செய்வதன் நோக்கம், அறிந்தும் அறியாமலும், நம் வாழ்விலும், விரதங்களைக் கைக்கொள்ளும் முறையிலும், நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே.

1.கோதானம் (பசு அல்லது தேங்காய்),
2.பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை.) சக்தியுள்ளவர்கள், பசு, நிலம் முதலியவை கொடுக்கலாம். இல்லாதவர்கள், தேங்காய் அல்லது சந்தனக் கட்டையைச் சற்று கூடுதலான தக்ஷிணையுடன் தானம் செய்யலாம். நமது சாஸ்திர‌ விதிகளில், அவரவர் வசதியைப் பொறுத்து தானம் செய்ய வழி செய்யப்பட்டுள்ள‌து.  பலன் வேண்டும் என்பதற்காக, ந‌ம் சக்திக்கு மீறிச் செய்வது, கடன் வாங்குவது போன்ற வேண்டாத பழக்கங்களுக்கு வழி வகுக்கும்.  நமது சாஸ்திரங்களுக்கு இதில் உடன்பாடே இல்லை.
3. திலதானம்(எள்),
4.ஹிரண்யம்(பொன்னாலான நாணயம்),
5.வெள்ளி நாணயம்,
6.நெய்,
7.வஸ்திரம்,
8.நெல்,
9.வெல்லம்,
10.உப்பு ஆகியன.

ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். இயலாதவர்கள் தொன்னையில் வைத்துக் கொடுக்கலாம். இவ்விதம் தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை,வஸ்திரம், தீபம், உதகும்பம், மணி, புத்தகம் ஆகியன.

விரத தினத்துக்கு மறு நாள் தான் தானங்கள் செய்வது வழக்கம். அன்று தம்பதி பூஜையும் விசேஷமாகச் செய்வது வழக்கம். 

தம்பதி பூஜைக்குத் தேவையானவை:
புடவை, ரவிக்கைத் துணி, வேஷ்டி, அங்கவஸ்திரம், திருமாங்கல்யம், மெட்டி, இவை வைக்கத் தட்டு அல்லது ட்ரேக்கள் ஆகியவை தேவை. தாம்பாளமும் வாங்கலாம். புடவை வேஷ்டி, அவரவர் வசதிப்படி, கறுப்பு நூல் கலக்காததாக,  பட்டுப் புடவை, வேஷ்டியோ (கறுப்பு, அல்லது கருநீலக்கரை வேஷ்டியில் கறுப்பு நூல் கலந்திருக்கும் வாய்ப்பு உண்டு), அல்லது நூல் புடவை வேஷ்டியோ வாங்கலாம். இரண்டு மாலைகளும் வாங்க வேண்டும்.

கலச ஸ்தாபனம் செய்த பிறகு, கலசங்களுக்கு, நான்கு கால பூஜைகள் செய்ய வேண்டும். 
சப்த ரிஷிகளைப் பூஜிக்க உதவும் 'சப்தரிஷி அஷ்டோத்திர'த்திற்கு இங்கு சொடுக்கவும்.

ஒவ்வொரு கால பூஜைக்கும், தனித்தனியாக, பிரத்தியேகமான நிவேதனங்கள் செய்ய வேண்டுவது அவசியம். வடை, பாயசம், மஹா நைவேத்தியம், இட்லி, கொழுக்கட்டை போல் வசதிப்படும் எதையும்  நிவேதனமாக வைக்கலாம்.

இந்த பூஜை நிவேதனங்களை ஒரு தட்டில் வைத்து, நான்கு வைதீகர்களுக்கு தானம் செய்வது நல்லது. மேலும், நான்கு கால பூஜைகள் நிறைவடைந்த பிறகு, அன்றைய தினம் இரவில், எட்டு கலசங்களையும் தானமாகப் பெறவிருக்கும் வைதீகர்களுக்கு, உணவு(பலகாரம்) அளிப்பது முக்கியம்.

பூஜைகள் முடிந்ததும், மறு நாள் புனர் பூஜை செய்ய வேண்டும்.

புனர் பூஜை:
மறு நாள், சுருக்கமாகக் கலசங்களுக்கு தூப தீபம் காட்டி, இயன்றதை நிவேதித்து புனர் பூஜை செய்த பின்,  விரதம் முடிப்போர், கலசங்களில் இருக்கும் நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

பின் கலசங்களைத் தானம் செய்ய வேண்டும். பின் தச தானம் முதலியவற்றைச் செய்ய வேண்டும்.

தம்பதி பூஜைக்கு அமர்கிறவர்கள், வயது முதிர்ந்த தம்பதிகளாக இருந்தால் விசேஷம். அவர்களை பார்வதி பரமேஸ்வரனாகப் பாவித்து, மிகுந்த பக்தியுடன், உபசார பூஜைகளைச் செய்ய வேண்டும். அவர்கள், மாலை மாற்றி, திருமாங்கல்ய தாரணம் செய்த பின், ஆரத்தி எடுத்து, அவர்களை நமஸ்கரிக்க வேண்டும்.

அதன் பின், பூஜையில் பங்கு கொண்டவர்கள், வந்திருக்கும் விருந்தினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கிய பின், விரதம் எடுத்தவர்கள்  சாப்பிடலாம். பலகாரமாக (டிபன்) சாப்பிடுவது வழக்கம்.

பொதுவாக விரதங்களின் நோக்கம், எவ்விதத்திலாவது இறைவழிபாட்டில்  மனதை ஈடுபடுத்தி, வாழ்வின் நோக்கம் ஈடேறப் பெறுவதேயாகும். தானங்கள் செய்யும் போது வசதிக்கேற்றவாறு கொடுக்கும் மனப்பான்மை வளருகிறது. தானங்களில் சிறந்ததான அன்ன தானம் செய்யும் பொழுது நமது பாவங்கள் மறைகின்றன. லௌகீகமாகப் பார்க்கும் பொழுது, நம் உறவும் நட்பும் விரத பூஜை தினத்தில் நம் வீட்டுக்கு வந்து, நம்மோடு சேர்ந்து பூஜைகளில் கலந்து கொள்ளும் போது, அவர்களுக்கும் இறையருள் கிடைக்கப்பெற்று, அதன் பலனாக, அவர்கள் வாழ்வில் வளம் சேருகிறது. நம் உறவுகளும் பலமடைகின்றன.

இந்த விரதம் இப்போது நடைமுறையில் அருகி வருகிறது. ஆனாலும் இவ்விரதம் பற்றிய செய்திகளைப் பதிவு செய்ய  வேண்டுமெனக் கருதியே இதைப் பதிவிட்டேன்.

இவ்விரத பூஜையைச் செய்ய இயலாதோரும், சப்தரிஷிகளை இந்நன்னாளில் வேண்டி வணங்கி நலம் பல பெறலாம். 

வெற்றி பெறுவோம்!!!!!

சோடசக்கலை

சோடசக்கலையைப் பின்பற்றுங்கள்:நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்
சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர்?எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.
இரண்டாவதாக,வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும்,கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது,வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.(எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களைஅதிகம்பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன.சந்திரன் ஸ்தூல உடலையும்,சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.
வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள்,துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள்,சேட்டுகள்,
மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம்.இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம்,மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.
பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார்.இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப்போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்
முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.
அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும்.அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.உதாரணமாக,அமாவாசை காலை மணி 10.20 வரை.பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப்பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும்(நாம் வாழும் மில்கி வே,அருகில் உள்ள அண்ட்ராமீடா),சகல உயிரினங்களும்(பாக்டீரியா,புல்,பூண்டு,மரம்,யானை,திமிங்கலம்,சிறுத்தை,கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன்,கடல்பசு,கடல் பாசிகள்,ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி,ஆந்தை,புறா,கிளி,காட்டெருமை,காண்டாமிருகம்,நாய்,குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு,சுறா மீன் ),ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.
அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும்.கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும்.மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப்பொறுத்தது.மனவலிமையைப் பொறுத்தது.திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.
தியானம் வீட்டிலோ,கோயிலிலோ இருக்க வேண்டும்.தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது.வயிறு காலியாக இருக்க வேண்டும்.சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும்.(அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்).நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக்கூடாது.மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை (திருமணம்,பணக்காரனாவது,நோய் தீர,கடன் தீர,எதிர்ப்புகள் விலக,நிலத்தகராறுதீர,பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர,வழக்கு வெற்றி எதுவானாலும்,ஏதாவது ஒன்று மட்டும்)நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.
தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது.இந்த தியானத்தை ஜாதி,மதம்,இனம்,மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

" விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....!
முடியும் என்று உன்னை நம்பு...!!"

ஞாயிறு, 11 ஜூன், 2017

இருவித பஞ்சாங்கங்கள்



அனைவருக்கும் வணக்கம். கன்னி ராசியில் செவ்வாய் நட்பா பகையா என்று ஒருவர் கேட்டார். அதற்கு “வாக்கியப்படி நட்பு, திருக்கணித படி பகை.” என்று கூறியிருந்தேன்... வாக்கிய பஞ்சாங்கம் சரியா திருக்கணித பஞ்சாங்கம் சரியா? இதற்கு யாராலும் முடிவுகாண முடியவில்லை...
ஜோதிட சாஸ்திரத்தை எமக்கு அருளிய மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகளை அடுத்த எமது தாத்தா, பாட்டன், முப்பாட்டன் என அனைவருமே வாக்கிய பஞ்சாங்கபடியே ஜாதகம் கணித்தனர்; பலன் கூறினர். இன்றும் அனுபவம் மிக்க வயதான ஜோதிடர்களும் , கிராமபுறங்களில் உள்ள ஜோதிடர்களும் வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி கணித்த ஜாதகத்தினையே பார்க்கின்றனர். அவர்களது வம்சாவழி முன்னோர்களும் அதனையே பின்பற்றி வந்தனர். அது ஒரு புறம் இருக்கட்டும்... விஞ்ஞானம் ஒன்று வந்து நன்றாக குழப்பிவிட்டு சென்றுவிட்டது... இன்று சொல்வர் நாளை இல்லையென்பர் விஞ்!ஞானிகள்.. நாம் வழிவழியாக பயன்படுத்திய எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, இப்போது அது தான் சிறந்தது என்று சொல்லவில்லையா? அதுபோலத்தான்... 

வானவியல் (Astronomy) என்ற சொல் வேறு ஜோதிடம் (Astrology) என்ற சொல் வேறு...

வானவியலானது வானவெளியில் குறித்த நேரத்தில் கிரகங்கள் எந்ந நிலைகளில் உள்ளன என்பதை ‪#‎மட்டும்‬ காட்டும். அதனால் தான் திருகணித பஞ்சாங்கத்தினால் துல்லியமாக சூரிய கிரகண நேரத்தினை கூறமுடிகிறது...
ஆனால் ஜோதிடம் என்பது நவ கிரகங்களின் கதிர்வீச்சினால் பூமியில் ஜனித்த குழந்தையின் தாக்கத்தினை அக்குழந்தையின் இறப்புவரையான காலகட்டம் வரை கூறுவதாகும். இங்கு குழந்தை
சூரியனில் இருந்து புறப்படும் ஒளி சுமார் 8 நிமிடத்தின் பின்னரே பூமியை வந்தடைகிறது என்று படித்த ஞாபகம்.
அப்படி இருக்கும் பட்சத்தில் ஜாதகர் பிறந்தவுடன் அவனை அடையும் கதிர்கள் நிச்சயமாக 10 நிமிடத்திற்கு முன்னர் வானவெளியில் இருந்து வந்த கதிர்களேயாகும். இதனால் ஜாதகன் பிறந்த நேரத்தை ஏறத்தாள சுமார் 15 நிமிடங்கள் முன்னதாக போட்டு திருக்கணித முறையில் ஜாதககட்டம் போட ஜாதகனின் கர்ப்பசெல் இருப்பு நீக்கி ஜனனகால இருப்புதிசை சில மாதங்கள் வரை அதிகரிக்கும். அந்நேரத்தில் சந்திரன் நின்ற நட்சத்திர நாதனின் தசா ஆண்டு எண்ணிக்கைபடி ஒவ்வொரு தசாவும் ஜாதகனிற்கு வழமையாக தொடங்கவிருக்கும் தசாகாலத்திற்கும் சிலமாதங்கள் பின்னதாகவே ஆரம்பிக்கும். இது வாக்கிய பஞ்சாங்கம் மூலம் கணித்த ஜாதகத்திற்கு (சற்று) அருகில் செல்லும். அது அந்த ஜாதகரில் விளைவை ஏற்படுத்த சிலகாலம் எடுக்கும். வேறும்பல சூட்சும கணிதங்களிற்கு பிறகு இதன் நிலையானது மேலும் வாக்கிய ஜாதக அமைப்பிற்கு அருகில் கொண்டு செல்ல முடியும். இங்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகமே வெல்கிறது. அத்துடன் இரண்டாவது கோட்பாடாக கிரக கதிர்வீச்சுக்கள் தமது பலனை எம்மில் தர நிச்சயமாக சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்.
  
எனது சிற்றறிவிற்கு தெரிந்தவரை இந்த இரு கோட்பாடுகளையும் உங்கள் முன் வைத்துள்ளேன். இது தவிர ஏராளமான பல கோட்பாடுகள் இருக்கும்.
இறுதியாக, குறிப்பிட்ட நேரத்தில் வானவெளியில் இருக்கும் கிரகநிலைகளை திருக்கணித பஞ்சாங்கம் துல்லியமாக காண்பிக்கும். அதாவது இந்த நேரத்தில் வானவெளியில் கிரகங்கள் எங்கெங்கு உள்ளன என்று காட்டும். இது வானவியல் (Astronomy) துறைக்கே அதிக பொருத்தமானது. கிரகங்களில் கதிர்கள் எம்மை வந்தடையும் நேரத்தையும் அது எம்மில் விளைவை ஏற்படுத்த எடுக்கும் நேரத்தினையும் துல்லியமாக அறிந்தே நேரடியாக ஜோதிட பலன் கூற வாக்கிய பஞ்சாங்கம் எமது மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகளால் தருவிக்கப்பட்டது; ஜோதிட பலன் தசாபுக்தி அந்தர சூட்சும முறையில் துல்லியமாக கூற வாக்கிய பஞ்சாங்கம் உகந்தது என்ற என்னுடைய கருத்தை உங்கள் முன்வைத்துள்ளேன்... வாக்கியம்; வானசாஸ்திரத்தை நேரடியாக பலன்கூறும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது ஆதரவு என்றும் வாக்கியபஞ்சாங்கத்திற்கே... ஆனாலும் நேரநெருக்கடி காரணமாக திருக்கணித பஞ்சாங்க ஜாதகத்திற்கு திருக்கணித முறைப்படி பலன் கூறுவதுண்டு. வாக்கிய பஞ்சாங்கபடி கணித்த ஜாதகத்திற்கு சில விசேட விதிமுறைகள் உண்டு. அந்த உத்திகளை வாக்கிய ஜாதகத்தில் பயன்படுத்தி பலன் கூற வேண்டும். அதன்மூலமாகவே பலன் கூற வேண்டும். ஆனால் பலரோ வாக்கியஜாதகத்திற்கும் பாவகச்சக்கரம் போட்டு திருக்கணித முறையில் கையாளும் உத்திகளை கொண்டு பலன் கூறிவிடுகின்றனர்... 

பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...

உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  hariram1by9@gmail.com

இவன்;
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.

வலுவிழந்த ஜாதகம்


அனைவருக்கும் வணக்கம்.

இருதினங்கள் முன்பு என்னிடம் பலன் அறிய வந்த ஜாதகம். தற்போதுதான் நேரம் கிடைத்து கணித்துகொண்டு இருக்கின்றேன். இந்த ஜாதகத்தில் ஒரு சூட்சுமம் உள்ளது. அதனை இங்கு பகிர்கிறேன்.... (தேவையான தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். ஏனெனில் ஜாதகம் பார்க்க தந்தவரின் அனுமதி இன்றி அவர் ஜாதகத்தினை இங்கு பொதுவாக பதிவிட முடியாது...)

தனுசு லக்கினம், மீனராசி. குரு 4ல் கேந்திரபலம் பெற்று அஸ்தமனமாகி அம்சத்தில் துலாத்தில். கூடவே ராகுவால் சூரியன், சந்திரன், குரு என மூவரும் கிரகணம்... புதன் கும்பத்தில்.

• ஜாதகம் சரிபார்த்தாயிற்று...

• லக்ன, ராசி திருத்தம் செய்தாயிற்று...

• லக்கினம், ராசி இரண்டும் முற்றாக பலமிழந்துள்ளது...

• இப்போது லக்கினத்தினையோ அல்லது சந்திரலக்கினத்தையோ முன்னிறுத்தி பலன் கூற முடியாது.

பின்னர் எப்படித்தான் பலன் அறிவது என நீங்கள் கேட்பது புரிகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜாதகர் கேட்ட கேள்விக்குரிய காரகனை மையமாக வைத்து பலன் அறிய வேண்டும் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக; இந்த நபர் சொத்து பற்றி கேள்விகேட்டுள்ளார். இங்கு செவ்வாய் நிற்குமிடத்தை லக்கினமாக கொண்டு ஜாதகரின் கேள்விக்கு பலன் உரைக்க வேண்டும் என்கிறது பிருகத்ஜாதகம். ஆனால் பலர் ஜோதிட மூலநூல்களில் கூறப்பட்ட விதிகளை அனுசரித்து பலன் கூறுவதில்லை. எடுத்தவுடன் லக்கினத்தினை மையமாக வைத்து பலன் கூற தொடங்கி விடுகிறார்கள். இவர்களது பலன் ஒருகாலமும் குறித்த ஜாதகருக்கு பொருந்தாது... இதனாலேயே “எந்த ஜோதிடர் சொல்வதும் எமக்கு பலிக்கவில்லை” என்று மக்கள் புலம்புகின்றனர். ஆகவே ஜோதிடம் கற்பவர்களே! மற்றும் நவீன?கணினி ஜோதிடர்களே! கணினியை ஒதுக்கி பேனா எடுத்து கணிதம் போட்டு ஜாதகத்தினை சரிபார்த்து ஜாதக திருத்தங்களை முறையாக மேற்கொண்டு அதன்பின் மூலநூல்களில் கூறப்பட்ட விதிகளை அனுசரித்து பலன் கூறுங்கள்... இதுவே உங்களை நாடி வரும் மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவி... அதேபோல ஜோதிடம் பார்க்கும் மக்களே! அதிக கட்டணம் வாங்குபவர், Appointment  கொடுப்பவர்தான் சிறந்த ஜோதிடர் என எண்ணி செல்லாமல் முதலில் அந்த ஜோதிடர் ஜோதிடத்தினை தெளிவாக கற்று உணர்ந்தவரா என அறியுங்கள். பரிஹாரம் எனும் பெயரில் ஆயிர கணக்கில் வசூலிப்பவர்களை தவிருங்கள். வாக்கிய ஜாதகத்தினையே வைத்திருங்கள். திருக்கணித ஜாதகம்/ கம்பியூட்டர் ஜாதகம் எல்லாம் சரிவராது. வாக்கிய பஞ்சாங்க ஜாதகம் பற்றிய ஒரு கட்டுரையினை அடுத்த பதிவில் பார்ப்போம்...

ஜோதிடம் கற்பவர்கள், ஜோதிடர்களிற்கு சில பொறுப்புணர்ச்சிகள் வேண்டும்...

* ஜோதிடம் கற்றவுடன் தம் திறமை என்பதை துறந்து; தாம் கற்றவையாவும் எம் ஜோதிட மூலநூல்களிலேயே உள்ளது என்றும் அவற்றை அருளிய ரிஷிகளும் நம் முன்னோர்களும் நமக்காக விட்டுச்சென்ற ஆசீர்வாதம் எனவும் எண்ண வேண்டும்.

* எந்த ஜோதிடகலையாயினும் அவ்வவ் மூலநூல்களில் தரப்பட்ட விதிகளை, விளக்கங்களை அவமதிப்பது குற்றம் என்பதைவிட துரோகம் எனும் சொல்லே மிக பொருத்தமானது...

* ஜோதிடம் வளர உதவி செய்ய வேண்டும். அதனை சரியான முறையில் எடுத்து செல்ல வேண்டும். சமூகத்தில் ஜோதிடத்தின் புகழை உயர்த்த வேண்டும்.

* ஜோதிடம் கற்பவர் ஒரு அன்னப்பறவை போல இருக்க வேண்டும். குருவை மனதில் சுமந்து பல ஜோதிட தகவல்களை பல இடங்களில் படித்தாலும் பாலையும் நீரையும் பிரித்து பாலை அருந்துவதுபோல சரியான தகவல்களை மட்டும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

* அடிப்படை ஜோதிடம் கற்பவர்கள் மக்கள் கேட்கும் சில சென்சிடிவ்வான கேள்விகளிற்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் மக்களின் ஜாதகங்களிற்கு பலன்கூறி தம்மறிவை வளர்க்க நினைப்பது தப்பு. அது மக்களை பாதிக்கும். ஆகவேதான் குருமூலமாக கற்க கூறுவது... இவர்கள் ஜோதிடர்கள் கூறும் பதிலை/பலனை வைத்து தம் அறிவை உயர்த்தி கொள்ளலாம்.

* இறைவனிற்கு பணிந்து, ஆன்மீகத்துடன் தன்னை இணைப்பவராக ஒரு ஜோதிடர் இருக்க வேண்டும். புண்ணிய பலன்களை தேடுபவராக இருக்க வேண்டும்...

பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...

உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  hariram1by9@gmail.com

இவன்;
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.

சூரியசந்திரர்க்கு மட்டும் ஏன் ஒருவீடு - ஆய்வு கட்டுரை.


அனைவருக்கும் வணக்கம்.

தந்தைகாரகன் சூரியன், தாய்காரகன் சந்திரன். ஒருவரிற்கு ஒருதாய்தந்தை மட்டுமே இருக்க முடியும். ஆகவே சூர்யசந்திரர்க்கு மட்டும் ஒருவீடு என்று சிலரால் கூறப்படுகிறது. இங்கு தாய், தந்தை எனும் அந்தஸ்து பெறும் கிரக காரகத்திற்கும் அவர்கள் உரிமைபெறும் ராசிகளிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை... இதுபோன்ற மேலோட்டமான கருத்துக்களையும் கிரகங்கள் இரு வீடு பெற்ற கதைகளையும் கேட்டிருப்போம்... ஆனால் எனது இந்த பதிவிலுள்ள எண்ணங்களானது வானவியலை அடிப்படையாக கொண்டு உண்மையான காரணத்தை அறிய வேண்டிய முயற்சியின் தேடலாக அமைகிறது...

ஒளிகிரகங்களான சூரியன், சந்திரனிற்கு தலா ஒரு வீடுகள். ஏனைய தாராகிரகங்கள் எனப்படும் புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி சுயமாக ஒளிர்வதில்லை. இவை சூரியனின் ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றன... வானவெளியில் உள்ள பல கிரகங்களிற்கு உபகோள்கள் உள்ளன. அதில் நாம் வசிக்கும் புவியின் உபகோளான சந்திரன் புவிக்கு மிக அருகில் உள்ளது. இதன் ஒளி எனும் கதிர்வீச்சு மனிதர்களிலும் கடல், தாவரம், சமநிலை என புவியின் பல்தரப்பட்ட வஸ்துக்களிலும் செல்வாக்கு செலுத்துகிறது என்பது ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள் கூட அறிவர்... எனவே பூமியில் வசிக்கும் நாம் கிரககதிர்வீச்சு என பார்க்கும்போது சூரியனை அடுத்து சந்திரனே முக்கியத்துவம் உடையதாக உள்ளது. அவ்வாறான சந்திரன் சூரியஒளியில் (மட்டும்) ஒளிர்கிறது.

பூமியில் வசிக்கும் எமது நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது சூரிய, சந்திர ஒளியை பிரதிபலிக்கும் கிரகங்களிற்கு தலா இரண்டு வீடுகளை நமது முன்னோர்கள் அமைத்து கொடுத்துள்ளனர். எத்தனை ஒளிர்வுகிரகங்களின் ஒளியை ஒரு பருப்பொருள் மீது பிரதிபலிக்கின்றதோ அந்த பருப்பொருளை மையமாக வைத்து எடுக்க வேண்டும். எத்தனை ஒளிர்வை பிரதிபலிக்கின்றதோ அத்தனை வீடுகளாக எடுக்கலாம். சூரியன் சுயமாக ஒளிர்கிறது. சந்திரன் சூரியனின் ஒளியில் மட்டும் ஒளிர்கிறது. ஆகவே இருவருக்கும் தலா ஒருவீடுகள் சொந்தமாக உள்ளது. ஏனைய கிரகங்கள் அப்படியல்ல. அவை சூரிய, சந்திர ஒளியில் ஒளிர்கின்றன. எனவே அவை இருவீடுகளிற்கு உரிமை பெறுகின்றன (நாம் பூமியில் இருப்பது கிரக கதிர்களை கணிப்பதால் சந்திரஒளியில் கிரக பிரதிபலிப்பியல்பு உள்ளது.) ஏனைய கிரகங்கள் சந்திரனின் சொந்தவீடான கடகத்திலிரும் சூரியனின் சொந்தவீடான சிம்மத்திலிருந்தும் வரிசையாக தலா ஒரு வீடுகளை கொண்டமையிலிருந்து இதனை உறுதிப்படுத்தலாம். சந்திரஒளிக்கு; நீச்ச கிரகங்கள் கேந்திரத்தில் அதன் நீச்சம் பங்கமடைவதிலிருந்து புவிக்கு அருகில் உள்ள சந்திரனின் ஒளியின் மகத்துவத்தினை நாம் உணர முடியும்.


பூமியின் உபகோள் சந்திரன் போன்று சனியின் உபகோள் குளிகன். இது புவியின்
நேரடியான ஆளுகைக்குட்படாமையால் ஏனைய கிரகங்களின் உபகோள்களிற்கு ஜோதிடத்தை பொருத்தவரை சொந்தவீடுகள் ஒதுக்கப்படவில்லை. ராகுகேதுக்கள் உண்மையில் நாம் நினைப்பதுபோல தொட்டு உணரக்கூடிய திடமான (பருப்பொருளான) கிரகங்கள் அல்ல. அவை சூரியசந்திரரின் நிழல்கள். ஒளியை முன்னிறுத்து பார்க்கும்போது ராகுகேதுக்கள் சூரிய அல்லது சந்திர ஒளியை பிரதிபலிப்பதில்லை. ஆகவே அவைகளிற்கு சொந்தவீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிழல் கிரகங்கள் எனும் ரா/கே இருள் எனும் விரும்பத்தகாத இயல்பால் ஜாதகரை பாதிக்கிறது. ஒரு எளிய உதாரணமாக கடவுள் எனும் ஒளி இருக்கும் இடத்தில் தீயசக்தி(பேய்பிசாசு) எனும் இருள் இருப்பதில்லை. இதனை கடவுள் எனும் ஒளி இல்லாத இடத்தில் தீயசக்தி எனும் இருள் இருக்கும் என அறியலாம். இதுவே ராகுகேது பலன்தரும் முறையாகும். எனவேதான் ஒளிகிரகங்களான சூரிய சந்திரர்க்கு இருளெனும் இவை கடும் பகையாக கருதப்படுகிறது... சிலரிற்கு பகல் உத்தமம், சிலரிற்கு இருளே உத்தமம் என்ற அடிப்படையில் ரா/கே நன்மை தரும் அமைப்பில் உள்ள போது நன்மைசெய்துவிடுகிறது... ராகுகேது பற்றி மேலும் விபரித்தோமேயானால் அது இக்கட்டுரையின் தலைப்பை திசைமாற்றகூடும் என்பதனால் இத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்...

ஜோதிடத்தை பொறுத்தவரை திருவருளும் குருவருளும் கைகூடி சிறிது நேரமெடுத்து சிந்தித்தோமானால் பல அற்புதமான விளக்கங்களும் குழப்பங்களும்? (அதற்கு தீர்வுகளும்) வருவதாலேயே ஜோதிடம் கடலாக உள்ளது போலும்... பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...
உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  hariram1by9@gmail.com
இவன்;
ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.